ஓமானில் மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’

ஓமானில் மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் 'தமிழ்க் குடும்ப இஃப்தார்" நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி மாலை 'மஸ்கட் டவர்" ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மஸ்கட் தமிழ் முஸ்லீம் பிரமுகர்கள், இலக்கிய கழக உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழக பொறுப்பாளார் திரு. பஷீர் முகமது அவர்கள் தெரிவித்தார்.
இஃப்தார் நிகழ்ச்சி கழக பொருளாளர் தக்கலை அப்துல் சலாம் வரவேற்புரையுடன் தொடங்கியது. இலக்கிய கழக ஆலோசகர் கவிஞர். அபுல்ஹசன் 'ரமலான்" பற்றிய கவிதை வாசித்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழக வளைகுடா பொறுப்பாளார் மற்றும் மஸ்கட் கழக அமைப்பாளர் திரு. பஷீர் முகமது, தமிழ் நாட்டில் கழக அமைப்பு பற்றியும், அது ஆற்றிவரும் சமூகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், மஸ்கட் பிரிவு ஆற்றிவரும் கல்வி உதவித்தொகை சேவை மற்றும் இலக்கியப் பணிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் விருந்தில் மகளிருக்கான மார்க்க போதனை நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. கழக செயலர் திரு. காமில் தாகிர் கனி அவர்கள் நன்றியுரை வழங்க, சிறப்பு உணவு விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.












Click it and Unblock the Notifications