திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26ம் தேதி புதன்கிழமை தொடங்கியது. அன்றுமுதல் தினமும் விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 31ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை நாளை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்பு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பூஜைகளும் நடைபெறுகிறது. மாலை 4.35 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது.
சூரசம்ஹாரத்தை பக்தர்கள் பார்ப்பதற்காக நாழிக்கிணறு, பஸ் நிலையம், கலையரங்கம் ஆகிய இடங்களில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நெல்லையிலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும் சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.