அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம்
அபுதாபியில் இந்தியப் பள்ளியில் இந்திய தூதரகத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மூவர்ணக் கொடியினை இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் ஏற்றி வைத்தார். இந்திய தூதரகத்திற்கு வெளியே குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் பள்ளி மாணவர்களின் தேசபக்தியினை ஊக்கப்படுத்தும் விதமாக அபுதாபி இந்தியப் பள்ளியில் இந்திய தூதரகத்தின் கொடியேற்று விழா கொண்டாடப்படுவதாக லோகேஷ் தெரிவித்தார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையிலிருந்து முக்கியப் பகுதிகளை வாசித்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் பி.ஆர். ஷெட்டி, முதல்வர் விஜயசந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று துபாய் இந்தியப் பள்ளியில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையிலிருந்து முக்கியப் பகுதிகளை வாசித்தார்.
மேலும் அவர் இந்திய வளர்ச்சியில் அமீரக வாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பெரிமிதம் கொண்டார். வெளிநாடு வாழ் இந்தியராக தென் ஆப்பிரிக்காவில் இருந்த மஹாத்மா காந்தி இந்திய விடுதலைக்கு பாடுப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் அமீரக இந்திய வர்த்தக உறவு குறித்தும் விவரித்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications