பழனி பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
பங்குனி உத்திரத் திருவிழா
முருகப் பெருமானில் அறுபடைவீடுகளில் மூன்றாம்படைவீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி. இங்கு பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கல்யாணம்
முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி- தெய்வானை திருக் கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் வெள்ளித் தேரில் மணக் கோலத்தில் எழுந்தருளினார்.
பங்குனி உத்திர நாளான இன்று காலை 4.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் முத்துக்குமார சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 4.30 மணிக்கு கிரி வீதிகளில் முத்துக்குமாரசாமி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி யாற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தாரை, தப்பட்டை, உடுக்கை, பெரியமேளம், திருச்சின்னம், பேரிகை, நாதஸ்வரம் உள் ளிட்ட இசைக்கருவிகள் முழங்க பழனி வந்தடைந்த வண்ணம் உள்ளனர். தீர்த்தக் காவடிகளுடன் ஆறுமுகக் காவடி, மயில் காவடி, சர்க்கரைக்காவடி, இளநீர்க் காவடிகளும் எடுத்து வருகின்றனர்.
பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.