ஜித்தாவில் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் சித்திரை கொண்டாட்டம்

ஜித்தா வாழ் தமிழர்கள் திரண்டு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாட ‘சித்திரை கொண்டாட்டத்தில்’ கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்பாளர் திரு. விஜயேந்திரன் வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நடனம், பாடல், நாடகம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றில் தங்கள் திறன்களை காண்பித்தனர். சிறுமி ஷஹெநாஜ் பாஷா அரேபிய பாடலுக்கு நடனமாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். திருமதி. கீதா சார்லஸ், திருமதி. ஹெப்சி ஜான் அணியினர் குழந்தைகளுக்கு கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அற்புதமான நாடகத்தில் நடித்து மகிழ்வித்தனர்.
ஸ்பெல் பீ மற்றும் கொலாஜ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட மற்ற குழந்தைகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. திரு. கோபால் வேதா தலைமை உரையில் மன்றம் நிறைவேற்றிய சமூகநல நடவடிக்கைகளையும், மன்றத்தின் கொள்கை, மதிப்பு மற்றும் எதிர்கால திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மேதகு இந்திய துணை தூதரக முதன்மை அதிகாரி (கன்சல் ஜெனரல்) ஃபைஸ் அகமது கித்வாய் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேதகு இந்திய துணை தூதரக சமூகநலத் துறை அதிகாரி (கன்சல் வெல்பேர்) சு.த.மூர்த்தி பங்கேற்று தனது உரையில் நலிந்த சக இந்தியர்களை ஆதரித்து உதவுமாறும் மற்றும் சவுதி அரேபியாவின் சட்டங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தினார்.
மேதகு ஃபைஸ் அகமது கித்வாய் அவர்களுக்கு நினைவு பரிசினை திரு. மொஹிதீன் வழங்கினார். திரு. பாண்டியன் மேதகு மூர்த்தி அவர்களுக்கு ஒரு நன்றிக் கேடயத்தை வழங்கினார். இந்த விழாவில் சமீபத்தில் ஜெத்தாவில் இறந்த சிகாமணி என்ற இந்தியருடைய குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று மன்றம் அறிவித்தது. இந்திய துணை தூதரகம் அவரது குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று சிகாமணியின் உடலை ஜெத்தாவில் அடக்கம் செய்தது என்று மேதகு மூர்த்தி அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.
ஜெத்தா தேசிய மருத்துவமனை உரிமையாளர் திரு. முகமது அலி மற்றும் அல் நவ்ரஸ் ஸ்டேஷனரி மேலாளர் திரு. மொஹிதீன் பாவா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியினை திரு. அமீர் பாஷாவும், திருமதி. அனுராதா விக்டரும் தொகுத்து வழங்கினர். திரு. மொஹிதீன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications