ஃபெட்னா 2017: 'மருதநாயகம்' மரபு நாடகம்... தமிழ்ப்பேரவை விழா சிறப்பு நிகழ்ச்சி!
'மருதநாயகம்' மரபு நாடகம் தமிழ்ப்பேரவை விழாவில் நடக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மினசோட்டா: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக தமிழ் விழாவில், 'மருதநாயகம்' மரபு நாடகம் நடக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகத் தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மினசோட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது ஆண்டு தமிழ் விழாவில் 'மருதநாயகம்'மரபு நாடகம் அரங்கேற உள்ளது.

நா. வானமாமலை (1917 - 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார்.
ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல், காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, வீணாதிவீணன் கதை, தமிழர் வரலாறும் பண்பாடும், தமிழர் பண்பாடும் தத்துவமும், பழங்கதைகளும் பழமொழிகளும் முதலான படைப்புகளைப் படைத்தவரும் 1917ஆம் ஆண்டு பிறந்தவருமான நா.வானமாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவினையும் பேரவை போற்றி மகிழ்கிறது.
சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் பிறந்தார் பனையூரில்இருந்த பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று.
இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்சேரி சென்றார்.
அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தார். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தார். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார்.
தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டார். அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி வகித்தார்.
ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில், மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.
பின்னர், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் "மண்டியிட மறுத்த" மருதநாயகம்..
சுருக்கவுரைக்கு அப்பாற்பட்டதை அரங்க மேடையில் அருமையாய்ப் பார்க்க, பேரவைத் திருவிழாவுக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறோம்... 🙏
1ம் தேதி சூலை 2017 சனிக்கிழமை நடைபெற உள்ள இந்நாடகத்தின் கதை மூலம்:- தமிழறிஞர் நா.வானமாமலை தொகுத்த கதைப்பாட்டு, இயக்கம்:- பேரா. இராஜூ (புதுச்சேரி பல்கலைக்கழகம்), இசை:- திரு. முருகவேல்.
மருதநாயகம் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு
ஆடும் திறமை, பாடும் திறமை, நடிக்கும் திறமை உள்ளவரா நீங்கள்? உங்களுக்கு 30வது தமிழ் பேரவை விழாவில் அரங்கேற்றபட உள்ள மருதநாயகம் நாடகத்தில் பங்குபெற ஓர் அறிய வாய்ப்பு!
விருப்பம் உள்ளோர் இந்த முகவரிக்கு உங்கள் பெயர், தொலைபேசி/கைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை அனுப்பி வைக்கவும்.












Click it and Unblock the Notifications