துபாயில் 100க்கும் மேற்பட்ட இளந்தளிர்கள் பங்கேற்ற இந்திய இசை, நடன நிகழ்ச்சி
துபாய்: துபாய் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் நடன நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்திய துணைத் தூதரக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சமூகசேவகரும், டிடிஎஸ் இவெண்ட்ஸின் நிர்வாகியுமான டாக்டர் ஜெயந்திமாலா சுரேஷ் தலைமை வகித்தார். முன்னதாக தமிழக பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏ.முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், இந்திய துணைத் தூதரகம் இந்திய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இளம் தளிர்கள் தங்களது இசை மற்றும் நடன திறமைகளை காட்டி வருகின்றனர். எதிர்கால இசையின் எதிர்காலமே நீங்கள் தான் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்திய துணைத் தூதரக அதிகாரி ரத்னமாலா, சிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான பிரவாஸி பாரதிய சம்மன் விருது பெற்ற கே. குமார், துபாயின் முதல் தமிழ் வானொலியான ரேடியோ சலாம் 106.5 எப்.எம். துணைத் தலைவர் ராஜேஷ் குமார், துபாய் அரசின் குவாலிட்டி விருது பெற்ற பவர் குரூப் மேலாண்மை இயக்குநர் முகம்மது உசேன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மனநல ஆலோசகர் குர்ஷித் பேகம் ஆகியோர் பூங்கொத்து வழங்கியும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். பாடல் ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன், நடன ஆசிரியை கவிதா பிரசன்னா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். கீதாகிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினர். மீரா கிரிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரசன்னா, பாலா, சுந்தர், விஜயேந்திரன், பாலாஜி, சக்ரவர்த்தி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications