பதட்டமும் அவசரமும்!
- எழுத்தாளர் லதா சரவணன்
நாம் அவசரங்களை விரும்புகிறோம், அவசியங்களை மறக்கிறோம். அது ஒரு அரசாங்க அலுவலகம், இரண்டு கெளண்டர்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அங்கே அதிக அவசரம் உள்ளவர்கள் இந்த வரிசையில் நிற்கவும், அவசரமில்லாதவர்கள் இந்த வரிசையில் நிற்கவும் என்று போர்ட்டு வைக்கப்பட்டு இருந்தது. கெளண்டரும் திறக்கப்பட்டது. அதிக அவசரம் உள்ளவர்களின் பட்டியலில் 100 பேர் நிற்கிறார்கள். அவசரமில்லாதவர்கள் பட்டியலில் 3 பேர் நிற்கிறார்கள்.

நம்முடைய அவசரமும் பரபரப்பும் நடைமுறையை நமக்கு மறக்கடித்து விடுகிறது. அதற்காக காலையில் 9 மணி அலுவலகத்திற்கு நாம் 8,30க்கு எழுந்தகொண்ட மெதுவாய் பணிகளை செய்வது தவறு. காலத்தோடு பயிர் செய் நேரத்தோடு அறுவடை செய் என்பதைப் போல் நாம் சற்று முன்னதாகவே நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பதற்றம் நம்மிடம் எப்போது வருகிறது. தவறு செய்யும்போது, நேரம் கடக்கும் போது, கோபம் கொள்ளும் போத, உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள் எல்லாமே பதட்டத்தில் நிகழ்ந்தவை அல்ல, மரத்தடியில் அமைதியாக இருந்தபோதுதான், ஆப்பிள் விழுவதைக் கொண்டு புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் நியூட்டன். குளித்துக் கொண்டு இருக்கும் போதுதான் மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுபிடித்தார் ஆர்க்கிமிடிஸ்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். எங்க வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்திருந்தார். வீட்டுக்குள்ளே நுழைஞ்சதுமே தன் கைக்குட்டையை எடுத்து ஒரு முடி போட்டுக் கொண்டார். இரவு சாப்பாடு முடிந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவருக்கு தனியறை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அவர் உறங்கப் போகிற நேரத்தில் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார்.
என்னாச்சு ?
எனக்கு ஞாபக மறதி அதிகம் நான் செய்யவேண்டிய விஷயத்தை எதையும் மறந்துவிடக்கூடாதுன்னு என் கைக்குட்டையில் முடிச்சு போட்டு வைப்பது வழக்கம். அப்படி ஒரு முக்கியமான விஷயத்தைத்தான் நான் இன்னைக்கு நினைவு வைக்க முடிச்சு போட்டேன். இப்போ மறந்து விட்டதுன்னு புலம்பினார்.
அதனாலென்ன ? டென்ஷன் இல்லாம யோசிங்க, என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு சில விஷயங்களை நினைவுபடுத்தினோம். எதையும் அவர் ஏற்கவில்லை, இரவு இரண்டு மணி வரையில், அவரும் தூங்கலை, எங்களையும் தூங்கவிடலை. யோசித்து யோசித்து களைத்துப் போய் ஒரு கட்டத்தில் அவரே அந்த கைக்குட்டையை தூக்கி வீசினார். ஆனால் அடுத்த நிமிஷமே அவருக்கு புரிந்து விட்டது. சீக்கிரம் உறங்கவேண்டும் என்றுதான் அந்தக் கைக்குட்டையில் முடிச்சுப் போட்டோம் என்று !
இப்படி அன்றாட வாழ்க்கையில் நாம் கூட பதட்டத்தில் எத்தனை சிக்கல்களை சந்திக்கிறோம். நேரத்தை சரியான முறையில் கடைபிடித்தாலே பதட்டம் தன்னால் விலகிப்போகும். பள்ளிக்கூடப்பிள்ளையின் முகத்தில் அப்பியிருக்கும் பவுடர் கூட பதட்டத்தின் செயல்பாடுதான். இரவு முழுக்க தொலைக்காட்சியில் மூழ்கியிருப்போம். காலையில் நேரங்கழித்து எழுந்திருப்போம். ஆனால் அலுவலக நேரத்தின் நெருக்கடிகளை வாகனத்தை செலுத்துவதில் காண்பிப்போம். பதட்டங்களால் தான் பல விபத்துகள் கூட அரங்கேறியிருக்கிறது.
நம்முடைய எல்லா காரியங்களையும் பதட்டம் தன் பசிக்கு இரையாக்கிக் கொள்ளும்!












Click it and Unblock the Notifications