தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது என்று ரியாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.
ரியாத் : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதற்கு ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரியாத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது மே 23, 24 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சீருடை அணியாத காவலர்கள், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று சுடும் காட்சிகளும் சில தொலைக்காட்சிகளில் வெளியாகின. ஆதிக்க வர்க்கத்தின் குருதித் தாகத்திற்கு இன்னுயிர் ஈந்தோர் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகமிருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. சல்ஃபர் டை ஆக்ஸைடு, ஆர்செனிக் ஆகிய நச்சு வாயுக்களை காற்று மண்டலத்தில் கலந்து விடுவதன் மூலம் சூழலுக்கும் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமையும் இந்த ஸ்டெர்லைட் ஆலை குஜராத், மஹாராஷ்ட்ரம் ஆகிய மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றாகும்.
தம்முடைய, தம் சந்ததியினருடைய வாழ்வுரிமையைக் காக்கும் நோக்கில் போராடிய அரசியல், கட்சி சார்பற்ற பொதுமக்களின் மீது மாநில காவல்துறை நடத்திய ஈவு இரக்கமற்ற துப்பாக்கிச் சூடு, விடுதலைப் போரில் வெள்ளை ஏகாதிபத்திய இராணுவத்தான் ஜெனரல் டயர் ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்த்திய வரலாற்றின் குருதிக்கறையை நினைவூட்டும் அரக்கச் செயலாகும்.
எப்பாடுபட்டேனும் தம் குடிமக்களை காக்க வேண்டிய தமிழகஅரசு,வேதாந்த குழும முதலாளிகளின் நோக்கத்தை வென்றெடுக்கும் போக்கில் அப்பாவி தமிழர் உயிர்களை காவு கொள்வதை நியாயச் சிந்தை உள்ள யாராலும் கிஞ்சிற்றும் ஏற்க இயலாததும் மனித நேயர்களின் கண்டனத்திற்கு உரியதுமாகும்.
தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய கடமைப் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உணர்ந்து, நாசகார சக்திகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளாலும், குறிப்பிட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட வழி காண்பதன் மூலமும் இப்பெருந்துயருக்கு ஆளான தம் குடிமக்களுக்கு சரியான நிவாரணம் வழங்கும்படிபடியும் அவர்களின் வாழ்வுக்கும் வாழ்வாதார அடிப்படை உரிமைகளை விரைவில் வழ இங்கிடும்படி உத்தரவிட தமிழக அரசுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.