சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 18... "சிங்கப் பெண்ணே"
பொதுவாக ஆண் ஒரு நாளைக்கு இருபத்து ஐந்தாயிரம் வார்த்தைகளும்.... ஒரு பெண் முப்பதாயிரம் வார்த்தைகளும் பேசுகிறார்களாம்!
இதில் சிக்கல் என்னவெனில்....
ஆண்கள் தங்களோட கோட்டாவான இருபத்து ஐந்தாயிரம் வார்த்தைகளை வெளியிலேயே பேசி முடிச்சிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போதுதான் பொண்ணுங்க தங்களோட கோட்டாவான முப்பதாயிரம் வார்த்தைகளை ஸ்டார்ட் பண்றாங்களாம்...ஹி.. ஹி.. (அடடே என்னவொரு புள்ளியியல்னு தான நினைக்கிறீங்க!) ...அதேதாங்க ..ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்புலேயே இயற்கை அவ்வளவு வேறுபாடுகளை அடக்கி வைத்துள்ளது !
குழந்தையிலும் பெண் குழந்தையானது சீக்கிரமே முகம் பார்க்கும் என்று சொல்லுவார்கள் ..ஆண் குழந்தைகளோ கார் பொம்மை , பைக் பொம்மை அல்லது ட்ரெயின் போன்ற "நகரும் விளையாட்டு பொருட்கள் " மீது அதீத ஆர்வமாக இருப்பார்கள் . வீட்டுலயே பாருங்க ..பெண்கள் எதையாச்சும் திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..அதை ஆண்கள் கவனிச்ச மாதிரியே தெரியாது ..சொல்ல வேண்டிய விஷயத்தை "ரத்தின சுருக்கமாய் சொன்னால் மட்டுமே" அவர்கள் கேட்டு செயல்படுவதை சிலர் கவனித்திருக்கலாம் ..
இப்டி பல்வேறு குணாதிசயங்களை விளக்கும் விதமாக நிறைய புத்தகங்களில் கூட இருவருக்குமான வேறுபாடுகளை நீங்க வாசிச்சிருக்கலாம் .."எம்புட்டு ருசிருசியா சமைச்சு தர்றோம் --என்னைக்காச்சும் நல்லா இருக்குனு சின்னதா ஒரு முறை பாராட்டவாது செய்றாங்களா இந்த ஆண்கள்?! என்பது பல பெண்களின் மைண்ட் வாய்ஸ் .."அய்யயோ பாராட்டாட்டி கூட பரவால்ல ...சொப்ப- சொள்ளை னு ஏதாச்சும் திட்டாம இருந்தா சரி" னு பாதி பேரு ..
பெண் குழந்தைகள் விளையாடினாலும் பார்பி பொம்மைக்கு தலை சீவுவது , சாப்பாடு ஊட்டுவது , குளிப்பாட்டுவது போன்ற செயல்களைத்தான் செய்து கொண்டிருப்பார்கள். அதே மாதிரி தான் பின்னாட்களில் வீர மங்கைகள் ஆனாலும் கூட சக ஆட்டக்காரர்கள் கீழே விழுந்தாலும் உடனே தூக்கி விடக்கூடிய தாய்மை உள்ளம் தான் அவர்களுக்கு உள்ளிருந்து முதலில் வெளிப்படும்.."அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு ?" என்ற காலங்கள் மலையேறி விட்டன! ..படித்து --பட்டம் பெற்று கடைசி வரை தாய் தந்தையரை கூடவே வைத்து பாதுகாத்து அன்பு செலுத்தும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்தான் இன்றைக்கு அதிகம் ..
பெண் என்பவள் மாபெரும் சக்தி.. ஆக்கவும் அழிக்கவும் திறன் பெற்றவள் .. பல்வேறு தடைகளை தாண்டிதான் பல்வேறு துறைகளில் இன்றைக்கு பெண்கள் சாதித்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆட்டோ டிரைவர்கள் , கார் - பஸ் -ரயில் ஓட்டுனர்கள் , பைலட்ஸ் , மாலுமிகள் , அரசியல் , காவலர்கள் , ராணுவம் ,மருத்துவர்கள் , செவிலியர்கள் , விண்வெளி வீராங்கனைகள் என்று பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை ..ஒரு தாயாக , அக்காவாக , தங்கையாக ,மகளாக , மனைவியாக , அவள் தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் விட்டுக்கொடுக்காமல் தன்னுடைய வேலைகளையும் சேர்த்து சமாளிக்க துணிந்தவளாகவே இன்றைக்கு பெண்கள் காணப்படுகிறார்கள் .. அனைவரையும் அவள் அரவணைத்து ஓடிக்கொண்டிருப்பதினால் அவள் இயந்திரம் அல்ல! என்று ஆண்களும் அதனை புரிந்து கொண்டு சமமாக வேலைகளை பகிர்ந்து செய்வதையும் நாம் பார்க்க முடிகின்றது ...
"மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா " என்றார் கவிமணி அவர்கள் .."ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் " என்று சொல்ல கேள்விப்பட்டு இருப்பீர்கள் ..ஆனால் இந்நூற்றாண்டில் "ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது --அவள் மட்டுமே !" என்கிற நிலைமைக்கு வந்தாச்சு .."ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவ பேச்ச அவளே கேக்குறதுஇல்ல " ங்கிற மாதிரி மிக ஸ்திரமாய் இன்றைக்கு பெண்கள் வலம் வருகிறார்கள்! .. அதற்காக அவள் ஆண்களை மதிக்க வேண்டாம் என்றோ மதிக்கவில்லை என்றோ சட்டென்று முடிவுக்கு வந்து விடக்கூடாது .. படித்து பட்டம் பல பெற்று வெளிஉலகை புரிந்து கொள்வதினால் , பெண்களுக்கு நிறைய சமூகம் சார்ந்த பார்வைகள் விரிவடைந்து இருக்கின்றன என்பதுதான் எதார்த்தம் ... அதனால் அவள் எடுக்கும் முடிவுகள் மிக சிறப்பாய் அமைகின்றது என்பது உண்மை ..
இன்றைய கால கட்டத்தில் கணவன் -மனைவி இருவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் ...நிறைய விவாகரத்துகள் ஏற்படுவதற்கு இந்த சம்பளம் , வேலை பார்க்கும் நேரங்கள் எல்லாமும் ஒரு ஓரத்தில் காரணியாய் அமைந்து விடுகின்றன ...இருவரும் வேலைக்கு செல்லும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பெண்ணின் மனநிலையை வீட்டிலும் சரி, துறை சார்ந்து அலுவலகத்தில் இருக்கும் ஆண்களும் சரி கண்டிப்பாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும் ..அதே போல வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் , பெரியோர்களும் அவளுக்கு உறுதுணையாக நின்று விட்டால் குடும்பமே முன்னேற்றத்தின் பாதையில் ராக்கெட் போல பறப்பதை காணலாம் ..
அந்த காலத்தில் எட்டாப்பு படிச்சு டீச்சர் ஆனவங்களாம் இருக்காங்க! ..அப்போ நிலைமை அப்டி ,இன்னிக்கு மூணு பி .ஹச் .டி ..பட்டம் வாங்குனாலும் அதற்கு ஏற்ற வேலையும் , சம்பளமும் கிடைப்பது இல்லை. ..அவ்வளவு சிரமத்திலும் பெண்கள் முன்னேற துடிக்கின்றார்கள் ..
எனக்கு ஒரு நண்பரைத் தெரியும் ..அவரும் கம்ப்யூட்டர்ஸ் படிச்சவர் தான் ..பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயர்-- டெக் லீடர் ...ஆனால் அவர் மனைவி சரண்யாவிற்கோ பெரிய கம்பெனியில் மிக உயரிய ஹச் .ஆர் வேலை .இரண்டு குழந்தைகள் .. எப்டி தான் இந்த பொண்ணு சமாளிக்குதோ?? னு நினைப்பேன் ..ஒரு நாள் பார்க்கில் இரு குடும்பங்களும் சந்தித்த போது சொன்னார் ,"நா வேலைய விட்டுட்டேங்க!" "என்னங்க சார் இப்டி சொல்றேங்க ..(அப்புறம் புவாவுக்கு வழி) .. படிச்சிட்டு அத்தனை பேரு வேலை இல்லாம சுத்திட்டு இருக்காங்க ..இந்த நேரத்துல இப்டி சொல்றீங்கனு எனக்கு செம்ம ஷாக் ..."எனக்கென்னங்க நல்ல மனைவி , கை நிறைய்ய சம்பாதிக்கிறா , அழகான ரெண்டு பெண் குழந்தைகள் , ரெண்டு சைடு பெரியவர்களுக்கும் வயசாயிருச்சு ...சரண்யாவும் ரொம்ப டெடிகேட்டட் பர்சன் .. அவுங்க ஆபிஸ்ல அவளுக்கு அப்படியொரு நல்ல பேரு .. ஷி இஸ் ஹைலி டேலண்ட்டட் யு நோ ?! ங்கிறாரு ...
"அதுக்காக ?...." ஆமாங்க என் குழந்தைகளையும் சேர்த்து மூன்று தேவதைகளையும் இப்ப நாதான் வீட்டில இருந்தே பாத்துக்கிறேன் "ன்னாரு .. அடடா இப்படியும் ஒரு எக்ஸப்ஷனா ?! வியந்து போனேன் ... ஆமா அவுங்க வரலையா பார்க்குக்கு ? அவங்க டயர்ட் டா இருப்பாங்க ...காலைல வேற மீட்டிங்னு சொன்னா .. சரிங்க நா கிளம்பறேன் ..போயி சப்பாத்தி செய்யனும் ! னு சொல்லிட்டு அவரு போய்ட்டாரு ... எனக்குதான் அப்படியொரு ஆச்சர்யம் ...இனிமேலு நம்ம புரட்சிப் பெண்கள் "நீ கட்டுன கைலியோட வந்தாப் போதும்யா ..நா காலம் பூரா உன்னப் பாத்துக்கிறேன் !" னு சொல்லுவாங்க போலனு நினைச்சுக்கிட்டேன் ... வளர்ச்சி என்பது எந்நிலையில் இருந்தாலும் நமக்கு ஆனந்தமே !
பணத்தைக் கொண்டு வீட்டை வாங்கலாம் ஆனால் சந்தோசத்தை வாங்கி விட முடியாது !..மெத்தையை வாங்கலாம் ஆனா தூக்கத்தை வாங்க முடியாது ! கடிகாரத்தை வாங்கலாம் ஆனால் நேரத்தை வாங்க முடியாது ! பணத்தால் புத்தகங்களை வாங்கலாம் ஆனால் அறிவை வாங்க முடியாது ...ஒரு வேளை உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்கி விட முடியாது ! பணம் என்பது இன்றைக்கு தலையாயது ஆனாலும் , உறவுகள் தாங்க அதை விட முக்கியம் என்பதை நண்பர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் !
சிறந்த செயல்களை யார் செய்தாலும் பாராட்டுவோம் --அப்படிப்பட்ட மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்வோம் ..பெண்மையைப் போற்றுவோம்!.. ஒரு பெண் எழுத்தாளர் என்கின்ற முறையில் இந்நன்னாளில் நானும் பெருமிதம் கொள்ளுகின்றேன் ! அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !
#சிங்கப்பெண்கள்
--விஜயா கிப்ட்சன்
[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, , 10, 11, 12, 13, 14, 15, 16, 17" title="8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17" />8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17