ஸ்ரீவரகுணமங்கை விஜயாசனப்பெருமாள்
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வரகுணமங்கை விஜயாசனப்பெருமாள் திருத்தலத்தைப் பற்றி இந்த வாரம் நலம் தரும் ஆலயங்கள் பகுதியில் அறிந்து கொள்ளலாம்.
நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியான அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் நவக்கிரக தலங்களில் சந்திரன் தலமாக வழிபடப்படுகிறது.
நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் இது விளங்குகிறது.
புராணச் சிறப்பு:
வரகுணமங்கை எனும் இத் திருப்பதியில் உரோமச முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு சத்தியவான் என்பவர் சீடனாக இருந்தார். இந்த சீடன் இந்த திருத்தலத்திலுள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடித் திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்தக் குளத்தில் சிராதன் என்ற செம்படவன் வலை வீசி மீன்பிடித்துக் கரையில் உலர்த்திக் கொண்டிருந்தார். அச்சமயம் ஒரு நாகம் அவரை தீண்டியது அவர் மரணமடைந்துவிட்டார். நாகம் மறைந்து விட்டது. கந்தர்வர்களால் கொண்டுவரப்பட்ட விமானத்திலேறி சுவர்க்கம் அடைந்துவிட்டார்.
இதைக் கண்ட சத்தியவான் தன் குருவான உரோமசரிடம் சென்று நடந்தவைகளைக் கூறி செம்படவன் செய்த புண்ணியத்தை விளக்கும்படி வேண்டினார். குரு உரைத்ததாவது செம்படவன் உயிர்களை வதைத்த பாவியாக இருப்பினும் இத்தீர்த்தத்தில் உயிர் விட்டதால் சுவர்க்கம் செல்லும் பாக்கியம் அடைந்தார் எனக் கூறினார்.
மேலும் குரு கூறியதாவது முன் காலத்தில் ரேவா நதிக்கரையில் வசித்த ஒருவன் மாதா, பிதா, குரு மூவரையும் வணங்கி தன் கடமையை சரிவர செய்து வந்தார். அவர் பகவானை நினைத்து தவம் செய்ய முற்பட்டார்.
உடனே திருமால் அவர் முன் அந்தணர் வடிவத்தில் தோன்றி வரகுணமங்கை என்ற திருப்பதிக்கு சென்று தவம் செய்யக் கூறினார். அவரும் விஜயாசனர் என்ற திருநாமத்துடன் பகவான் எழுந்தருளியிருக்க வேண்டுமென்று வேண்டினார். அவ்வாறே பகவானும் அருள் புரிந்தார்.
சிற்பச் சிறப்பு:
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ராஜகோபுர சிற்பங்களின் அழகும் வடிவமைப்பும் வியக்கத்தக்கதாகும். கோபுரத்தின் முன்புறத்தில் தசாவதாரச் சிற்பங்களும், காளிங்க நர்த்தனச் சிற்பமும் வடமேற்கு பகுதியில் வாசுதேவர் ஸ்ரீகிருஷ்ணரை கூடையில் வைத்து யமுனை நதியை கடக்கும் சிற்பங்களும் கிழக்கே திருமுக மண்டலம், ஆதி சேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த திருக்கோலம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
இலக்கியச் சிறப்பு:
இத்திருத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.
தனிச் சிறப்பு:
நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியாகவும் சந்திரனுக்குறிய தலமாகவும் விளங்குகிறது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது. அருள்மிகு யோக நரசிம்மருக்கு பிரதோஷ காலத்தில் அனைத்துவகையான திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருத்தலம் அமைவிடம்:
திருவைகுண்டம்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருவைகுண்டத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருவைகுண்டம் மற்றும் ஏரலில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவன்: அருள்மிகு விஜயாசனப் பெருமாள்
இறைவியர்: அருள்மிகு வரகுணமங்கை
அருள்மிகு வரகுணவல்லி
தீர்த்தம்: தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம், அகநாச தீர்த்தம்
தல விருட்சம்: புளிய மரம்
ஆகமம்: வைகாநச ஆகமம்
விமானம்: விஜயகோடி விமானம்.