ஜனவரி 16ல் மாபெரும் பொங்கல் திருவிழா... கிராமத்து பாணியில் - லண்டனில்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த வீரத் தமிழர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் லண்டனில் வருகிற தைப் பொங்கல் திருநாளன்று ஊர் கூடி பொங்கல் வைக்கும் வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,
ஒரு இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அவர்களை அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்று படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் மற்றும் நமது தேசிய தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க "பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது" என கூறி நமது தமிழ் சமுதாயத்தை வழி நடத்தி வந்துள்ளனர்.

நம்மை அடிமைப்படுத்த நினைத்த சக்திகள் நமது மொழி மற்றும் பண்பாட்டு சிதைவுகளை நாளொரு வண்ணமாக நம்மில் நிகழ்த்தி வருகிறது. எனவே இவற்றில் இருந்து நாம் நமது கலைகளை மீட்டெடுக்கவும், காக்கவும், ஏற்க்கனவே இழந்து விட்ட நமது பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதும் காலத்தின் அவசியமாகிறது.
இன்று நாமிருக்கும் கால கட்டத்தில், அசுரவேகமான இயந்திர வாழ்கையில் நம்மக்களை இந்த கண்ணோட்டத்தில் சிந்திக்கவைப்பதே சிரமமானது. ஆகவே ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் தமிழ் குடும்பங்கள் லண்டனிலும் அதற்கு அருகாமை நகரங்களில் இருந்தும் இணைந்து உருவாக்கியதே வீரத்தமிழர் முண்ணனி ஐக்கிய ராச்சியம்.
1) நம் தமிழ் குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய கலாச்சார விலுமியங்களை படிப்பித்து, இளமையிலேயே அவர்களுக்கு தமிழ் உணர்வு மற்றும் பெருமைமிக்க தமிழர் பண்பாட்டு அறிவோடு வளர்த்தெடுப்பது.
2) இங்கிலாந்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் மொழியின் அடிப்படையில் ஒன்றிணைத்து நம் இனத்தின் வரலாற்று பெருமைகளையும் மொழியின் மேன்மையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது.
3) தாய்தமிழகத்திலும் இலங்கையில் வாழும் நமது தமிழ் உறவுகளுக்கும் பொருளாதார அடிப்படையில் உதவிகளை மேற்க்கொள்வது.
இந்த கொள்கைகளை வைத்து நகரும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி, வரும் தைத்திங்கள் இரண்டாம் நாள் தை 2 (16-01-2016) நாள் பொங்கலை வெகுவிமரிசையாக கொண்டாடும் பொருட்டு "தமிழர் திருநாள் மாபெரும் பொங்கல் விழா" இலண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாம் வாழும் இடங்களில் காலம் காலமாக நடைபெறும் ஊர்கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு Roselyn Cottage 3 Croydon Lane Banstead SM7 3AS என்ற இடத்தில் நடைபெறும். அது மட்டுமல்லாது கலை நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளை நம் கலாச்சாரம் சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களுடைய பண்பாடு மற்றும் கலாச்சார பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள அத்தனை தமிழ்பேசும் உறவுகளுக்கும் இந்த செய்தியை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். லண்டனில் வசிக்கின்ற தாங்களுடைய உறவுகளிடத்தில் இந்த செய்தியை கொண்டு சேர்த்து அவர்களையும் இந்த நிகழ்வில் பங்கெடுக்க சொல்லுமாறு அன்போடு வேண்டுகிறோம். இந்த நிகழ்வில் பங்குகொள்ள விரும்பும் தாய்த்தமிழ் உறவுகள் எங்களை தொடர்புகொண்டு தங்களின் வருகையை உறுதி செய்யும்படி அன்போடு வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications