இன்று இருட்டுத்தான்:
இன்று இருட்டுத்தான்
நாளை...
சூரியன் தலைக்கு மேலே வரும்.
வீதி விளக்குகளும்
விடியாமல் போன
மூன்று வருடங்களுக்குப் பின்னர்,
இன்று,
நட்சத்திரங்களையும் மேகம் மறைத்துவிட,
இருளே தடுமாறும் இருட்டு.
அடிமைச்சுகமே அற்புதமென்று,
அடங்கிக் கிடக்கும் தமிழனைப் போல...
வெளிச்சம் அற்றுப் போனதை மறந்து,
இருட்டில் வாழப் பழகிய முகங்கள்.
நாளைப்பொழுது எப்படிக் கழியும்?
என்றே எண்ணி,
ஏங்கியபடியே,
இருட்டில் இருந்து இருமும் கணவன்.
பஞ்சு விளக்கில் படிக்கும் பிள்ளைகள்.
பழைய கறியை கொதிக்க வைக்க,
மூட்டிய அடுப்பு வெளிச்சம் தன்னில்,
முட்டை விற்று.
முருங்கைக்காய் வாங்கிய
வரவு செலவைப் பார்க்கும் மனைவி.
மாசி மாதப் பனிக்கு,
வாயில்
பொருக்கு வெடித்த மாதிரியாக,
வெடித்துப் பிளந்த எங்கள் வீதியில்,
மனிதச் சுமைகளைச் சுமந்து சென்று,
கிளாலிக் கரையில்
கொட்டிய பின்னர்,
ஊரின் அயர்ந்த உறக்கம் கலைத்து
மண்ணெண்ணெய் குடித்த
மோட்டார் சைக்கிள்,
உறுமிக் கொண்டு ஓடிச் செல்லும்.
யப்பான்காரன் பார்த்தால்...
விரலை
வாயில்வைத்து அதிசயப்படுவான்.
பெற்றோல் விற்கும் அரபுக்காரன்
வயிற்றில் அடித்து,
மயக்கம் அடைவான்.
பட்டணம் சென்று படிக்கும் பொடியள்
படிப்பு முடிந்து திரும்பும் போது,
இருண்டு கிடக்கும் வீதியில்.....
அவர்கள்,
போரம்மா" என்று பாடிக்கொண்டு
போவதைப் பார்க்க மனசு நிறையும்,
தூரத்தில்...
துப்பாக்கி வெடிக்கும் சத்தம்,
எறிகணை விழுந்து வெடிக்கும் அதிர்வு,
பண்டத்தரிப்புப் பக்கமாய்
இராணுவம்
நகருவதாக வோக்கி" கதைக்கும்.
ஆங்காங்குள்ள முகாம்களிலிருந்து,
பிள்ளைகள்" ஏறிப் போகும் வாகனம்
வீதியில் இரைந்து மெல்ல மறையும்.
ஆயினும் எந்த அச்சமுமின்றி,
இருட்டில் மக்கள் இருப்பர்
சிரிப்பர்.
பொடியள்" உண்டு என்ற நினைப்பில்,
நம்பிக்கையோடு ஊர்கள் உறங்கும்.
தம்பியின் காலத்தில் "
பாடிக்கொண்டு போன கிழவனில்
எத்தனை உறுதி முகத்தில் இருந்தது.
இருட்டில் இருந்தும் எங்கள் தாயகம்,
இருப்பை இழந்து போய்விடவில்லை.
எந்த நெருப்பும் எம்மைச் சுட்டு
எரித்திட முடியாதென்பதை அறிவோம்.
இருட்டில் இருந்தும்,
இருட்டைத் துடைப்போம்.
இருகை விலங்கை இன்றே உடைப்போம்.
சூரிய வெளிச்சம் சுதந்திரமானால்,
நாளை எங்கள் மண்ணின் மேலே
சூரியன் வருவது நிச்சயம் !
நிச்சயம் !