நினைவுகளின் பூனை
நினைவுகளின் பூனை,
ஓரத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்,
ஒன்றுமே அறியாததான பாவனைகளுடன்.
நுனிப்பாதங்களில் நடந்து,
கவனிக்காத தருணங்களில்
தரிசனம் தந்து நம்மை
நிதானமிழக்கச் செய்யும்.
நகங்களைக் காட்டிலும்
அதன் நீல நிற விழிகளின்
கூர்மை
நம்மைக் காயப்படுத்தும்.
சில மழைநேரப் பொழுதுகளில்
மடியேறிப் படுத்துறங்கும்
சலனமற்ற குளத்தில் யாரேனும்
கல்லெறிந்து கலைத்தால்,
பூனைக்கு மட்டுமல்ல
நமக்கும் சினம்பிறக்கும்.
கோபம் வருகையில் விரட்டிப் பிடித்து
உயரத்தூக்கி
பலங்கொண்ட மட்டும் தூக்கியெறிவோம்,
அதுவோ,
சிராய்ப்புகளுமின்றி
உயிர்பிழைத்தெழுந்து
ஏளனமாய்ச் சிரித்து நகரும்.
கண்ணில் படாமல் மறைந்து
மரமேறி ஒளிந்து கொண்டாலும்
பின் தொடர்ந்து தேடி வந்து
மரமேறி நின்று
மீசை காட்டி மிரட்டும்.
நினைவுகளின் நாய்களில்
சில நமக்கு அடிமைகள்,
சில நமக்குத் தோழர்கள்,
சில நமக்குக் காவலர்கள்.
நினைவுகளின் பூனைகள்
எல்லாமே நமக்கு எஜமானர்கள்.