நரகாசுரனின் மரணம்ரிஷி சேது
சுற்றி சுற்றி வரும்
என் சந்தோஷக் கனவுகளை கொண்டு
"சங்கு சக்கரம்"
அப்பா பதினாறு மத்தாப்பு
வாங்கி வந்து மூன்று பேருக்கும்
பிரித்துக்கொள்ளச் சொல்வார்
சரியாய் பிரித்து வரும் மிச்ச ஒன்றை
தம்பிக்கு அரைமனதாய் கொடுப்போம்
நானும் அண்ணாவும்
அப்பா-
வெடிக்கும் எதையும்
வாங்கி தரமாட்டார்
ஒரே ஒரு முறை ஓலை வெடி
வாங்கி வந்து நூறு
எச்சரிக்கை செய்தார்- அதில்
இருபதுக்கும் மேல் வெடிக்கவேயில்லை
அப்போதே ஆனந்து வீட்டில்
ஆயிரம்வாலா வெடிப்பார்கள்
அப்போதெனக்கு துணிமணிகள் மீது
அத்தனை ஆசையில்லை, ஆனாலும்
பண்டிகைக்கு பத்து நாள் முன்பு
மணியன் கடையில் கொடுத்து
பட்டன் தெரியாமல் தைக்க சொல்வேன்
கோ-ஆப்டெக்ஸில் எல்லோருக்கும் எடுத்து
அப்பாவும் அம்மாவும் மிஞ்சும்
பணத்தில் எதையோ எடுத்துக் கொள்வர்
அம்மா ஆறுதலடைந்திருக்கலாம்
மகன்கள் வேலைக்குப்போய்
பட்டுப்புடவை எடுப்பார்களென்று
எண்ணை தேய்த்து குளித்து
பலகாரம் தின்று
நண்பர்களுடன் சினிமா போய்
அடுத்த நாள் பள்ளி செல்லும் போது
அம்மாவை கவனிப்பேன்
ஓராயிரம் கனவுகள் மின்னும்
அக்கண்களில்....
பண்டிகைக்காக செலவழித்த
தோடோ, வளையலோ இழந்த
ஏக்கம் மறைத்து...
அதன் பிறகும் நிறைய
தீபாவளி வந்து போயிற்று
இன்றைக்கும் எனக்கு ஏக்கமுண்டு
அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
துணிகளெடுத்து- நிறைய
வெடி வெடித்துக் கொண்டாட
நரகாசுரனின் மரணம்
எத்தனை சந்தோஷமானது
என்றெண்ணிய நாளில்
வெடித்ததென் குரூரம்
சீன வெடியாய்...
அம்மாவின் பட்டுப்புடவை அதில்
கருகிப்போயிற்று
நான் இப்போதெல்லாம்
தீபாவளி கொண்டாடுவதில்லை.....