Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுயம் பிரிந்து...- சசிகுமார்

Subscribe to Oneindia Tamil

சன்னல் வழி சாரல்
மொட்டைமாடி மாலைக்காற்று
சாத்தியமில்லை இங்கு
மெரினா மணற்பரப்பில்
கால்புதைத்து கால்புதைத்து
அலைசேர்ந்து கால் நனைத்து
கையுடன் காலணியேந்தி
அலை விளிம்பில் நடப்போம்

அரவமற்ற மணல்வெளியில்
சிறுவட்டமாய் சேர்ந்தமர்வோம்
கன்யாகுமரி வயலின்
காணாமல் போன கண்ணகி
மணிரத்னம் மருதுவின் கைவண்ணம்
மீராவின் கவிதைகள்
அன்றைய டிசம்பர் கச்சேரி
அறுசுவை அரசின் இடியாப்பம்
சச்சினும் லாராவும்
தவறாதுண்டங்கு

சுஜாதாவை சிலாகிக்கையில்
சுண்டல்சிறுவன் வெறிப்பதை ரசிப்போம்
திடுதிப்பென்று ஒரு ஹைக்கூ
திடீரென்று வந்து விழுவார்
வேதியியல் ஆசிரியர்
அரைவேக்காட்டு கல்லூரி காதல்கள்
அம்பலம் ஏறும் அன்று
வீரப்பன் காவிரி தவிர
விட்டு வைத்தது
நாம் எதுவுமில்லை

நூலறுந்த பட்டமாய் நம்வாதம்
நில்லாது ஓரிடம்
சலித்து சூரியன்
தொலைவில் எங்கோ மூழ்கிவிட
காக்கிநிறம் கண்ணில் விழும்வரை
எஞ்சி நிற்பது
நாமும் நட்ச்சத்திரங்களும்
அறை நோக்கி சீறுகையில்
அஞ்சப்பரோ ஆரியபவனோ
நிச்சயம் வாய்க்காது
நட்பு வட்டம் இங்கொன்று
ஒத்த மனத் தோழன்
ஒருவனில்லை இங்கு

நண்பன் நாடு சென்றான்
விடுமுறையில் ஓர் மாதம்
வைரமுத்துவை வாங்கிவா என்றேன்
வழியெல்லாம் விழியாய்
வரும் விமானத்திற்கு வந்து நின்றேன்
நண்பனின் வருகைக்கல்ல
கல்கியும் வைரமுத்துவும் கூடவருவார்கள்
சிரித்துவிட்டு மெல்ல சொன்னான்
கல்கிக்கும் பாரதிக்கும் இடமில்லை
கைமுறுக்கும் சாம்பார் பொடியும்
சம்படத்தில் கொண்டுவந்தேன்
கடியாமல் கை நீட்டினேன்
கைமுறுக்கும் வேண்டும் எனக்கு

அண்ணாந்து காயம் பார்த்து
முகத்தில் சாரல் வாங்கி
சிலிர்த்த காலம் செத்து
கண்ணாடி பின் நின்றும்
மழை ரசிக்க மனமில்லை
விரைந்தோடி வலைதளத்தில்
நெடுஞ்சாலை நிலவரம் மேய்வேன்
போக்குவரத்தில் அகப்பட்டு
நத்தையாய் நான் நகர்கையில்
என் மனம்
காட்டாற்றில் சிறுகிளையாய் எனை
கடத்திக்கொண்டு பின் போக
சிலீரென்ற சாரல்
பின் எழும் மண்வாசனை
வேண்டிவிரும்பி தலை நனைந்து
வீடு சென்று சேர்கையில்
பதறி தலைகலைத்து துவட்டும்
என் அம்மா
ஆவி பறக்க தேநீர்
அடுத்துவரும் சிறு உணவு
எங்கு விட்டாலும்
அன்னை நோக்கி அடிபயிலும்
மழலையாய் என்மனம்
சேருவதோ சென்னையில்தான் !

பின்தொடரும் வண்டி
ஒலித்து என்னை எழுப்ப
அனிச்சையாய் இயந்திரமாகிறேன்
கூட்டினடையும் குருவியாய்
கதவை அறைந்து சாத்த
காலையில்தான் திறக்கும்
ஒரு வழியாய் உணவுமுடித்து
மீண்டும் என் மல்யுத்தம்
தொலைக்காட்சியுடன் தொடங்கும்
தமிழ்சேனல் இங்குண்டு
அமெரிக்கா வரை துரத்தும்
அழுகை தொடர்கள்!
அணைத்துவிட்டு அப்படியே சாய்வேன்
அதிகாலை அலாரம் அடித்தெழுப்பும்
என் வாழ்வின் மற்றொருநாள்
இரைதேடும் எறும்புகளாய்
சாலை எங்கும் கார்கள்
மனித முகம் தெரியவில்லை

சத்தமில்லா தீபாவளி
சக்கரை இல்லா பொங்கல்
சகோதரியின் வாழ்த்து அட்டை
சரியாய் வந்து சேராவிடின்
பிறந்த நாள் மறந்துபோகும்
திருநாளெல்லாம் மறுநாளாய் விடியும்
இத்திருநாட்டில்!
வெற்று சிரிப்புகளும்
தேன் தடவிய வார்த்தைகளும்
சுவரையும் நலம் விசாரிப்பார்களோ
சந்தேகம் வருகிறது!

விடுமுறைக்கு தவமிருந்து
தாமஸ்குன்றின் மேல்
விமானம் தாழ்வாய் பறக்கையில்
இருப்புக் கொள்ளாது
மனம் இருக்கையில்
சுங்கம் தாண்டி
சீறிப்பாய்ந்து
கோடை மழைக்கு
வானம் வெறிக்கும்
நம் விவசாயிபோல்
வாசலில் தவமிருக்கும்
பெற்றவர்கள்
முன்நெற்றி சிறுவழுக்கை
அம்மாசொல்லி அறிவோம்
இளநரைகளை எண்ணுவாள்
என் சகோதரி

உனக்கிது மூன்றாவது
விடுமுறை
இன்றோடு எனக்கு
ஐந்து பிரசவம்
சொல்லிவிட்டு சிரித்தாள்
என் அம்மா
உள்ளுக்குள் ஏதோ
உடைந்து விழ
வார்த்தை வராமல் தவிப்பேன்!
இளமையில் டாலர்
ஒளவையும் சொல்லவில்லை !
நேசம் பிரிந்து
மண்வாசம் மறந்து
பங்குச்சந்தை வர்த்தகத்தில்
இழந்தது சுற்றமட்டுமல்ல
சுயத்தையும்

இந்தியா ஒளிர்கிறது!
தேர்தல் சுவரொட்டி அல்ல
நாடு சிறக்குதென்று
நாற்புறமும் செய்திவர
நான் திரும்பும்நாள்
நெடுந்தொலைவில் இல்லை
நம்பிக்கை விதையூன்றி
விருட்ச்சமாக காத்திருப்பேன்

காலம் சொல்லும் கதை
நான்கு வருடம் உருண்டோடி
கூசாமல் தருவேனோ
இது போல இன்னொன்று!
பின் நரைகூடி கிழப்பருவமெய்தி
வீழ்வேனோ அந்நிய மண்ணில்
வெற்றிடம் நிரப்ப
விழைகிறேன் வெறுமையாய்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+