பழைய பஞ்சாங்கத்தில்..கருணாநிதி
பேரை வைத்துத்தான் ஆண்டுக் கணக்கு வைப்போம்-
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நாளை
ஆண்டின் தொடக்க நாள் என்று ஆன்றோர் சான்றோர்
அறுதியிட்டுக் கூறிய பின்னும் அதனையேற்று
வள்ளுவர் ஆண்டினை வண்டமிழர் ஆண்டென்று கூறவே,
எள்ளத்தனை இன உணர்வும் கொள்ள மாட்டோம்''-
பள்ளந்தனில் விழுகின்ற பொட்டுப் பூச்சியாய்;
பழைய பஞ்சாங்கத்தில் பதுங்குவதோ பகுத்தறிவு
தமிழ் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் முதல் நாள் என்பதை
இமிழ் கடல் வேலித் தமிழகப் பேரறிஞர் மறைமலையடிகள் தலைமையில்
அமிழ்தெனும் கருத்தாய் ஆய்ந்தறிந்து கண்டார்-
அறம் பொருள் இன்பம் எனும் அருங்குறள் யாத்த அய்யன்
அரும் பெரும் பெயரால் திருவள்ளுவர் ஆண்டென அரசுச் சார்பில் அன்று;
அறிஞர் மன்றில்-ஆன்றோர் அவையில்-தை முதல் நாள் தமிழ் ஆண்டு
முதல் நாள் என்றோம்
ஆலோசனை சொல்லித் தமிழரை மேலும் வளர்ப்பதற்கு அக்கறையற்றோர்
பூலோகம் இருண்டதெனப் பூனை போல் இரு கண்களை மூடிக்கொண்டு;
"ஆலோலம்'' பாடுகின்றார் அரும்பிவிட்ட தமிழ் உணர்வை விரட்டுதற்கு!
ஆரியத்தைத் தூக்கி நிறுத்துவதே சிலர் குறிக்கோள் என்றால்
அவர்தம் செய்கைக்கு நாம் குறுக்கே நிற்க விரும்பவில்லை-
ஆனாலும் எம் குறிக்கோளாம் குறள்வழித் தமிழ் ஆண்டின் சிறப்பைக்
குலைப்பதற்கு எந்தக் கூட்டத்தின் புலம்பலுக்கும் இடம் தருவது
இல்லை என்போம்!
-கருணாநிதி