ஒன்றாய் கூடுவோம்..வென்றே தீருவோம் - கருணாநிதி கவிதை
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தை விமர்சித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து முதலவர் கருணாநிதி இயற்றியுள்ள கவிதை...
உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடினோம்!
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம்!
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்!
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம்!
ஈழ விடுதலை போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்.
இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்துஇடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர்-அந்த
விடுதலை தளகர்த்தர்க்கிடையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று;
ஆளுக்கொரு ஆயுதம் ஏந்தி அவர்களை அவர்களே அழித்துக் கொண்டனர்-
பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்
சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா;
சிங்கத் தமிழகத்தின் ஒற்றுமை!
அதனாலேயே அங்கும் சகோதர யுத்தம்-
அவர்களை ஆதரிக்கும் இங்கும் அந்தோ; அதே யுத்தம்!
இருதரப்பிலும் இக்குற்றம் சுமத்தி
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இனத்தால் தமிழர் புல் பூண்டும் அறவே செதுக்கப்படாமல் காப்பதற்கே
இன்றோர் வேலை நிறுத்த அறப்போரில் ஈடுபட அனைவரையும் அழைத்தோம்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்த தீர்மானமுடன்-
இந்திய அரசின் அமைச்சரவையும் கூடி அதே கருத்தை அறிவித்தமை கண்டோம்.
இன்னும் இன்னும் வேகமாக நம் குரலை உயர்த்தி நடுவணரசை
முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கை போரை என்றால்;
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்குத் தம்பியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? இந்தத்
துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?
கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா? அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.