பரணியெங்கும் பரவிநிற்கும் அமிழ்த தமிழ் நெஞ்சங்களுக்கு.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - கவிதை!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் தமிழர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டான பிலவ ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. இந்த புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிலவ தமிழ் புத்தாண்டு 2021- ஐ முன்னிட்டு நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு அனுப்பியுள்ள கவிதை:
நாலுவரி வெண்பா பாட
வரக் கவி
இன்றில்லை
தமிழை வளர்த்தெடுக்க
பாட்டன் பூட்டன்
ஆதித் தமிழில்லை
வறட்டு கவுரவம் வாடகைமொழி
வாடை வீசுதெங்கும்
இதில்
சாதி சங்கம் பெருக்கெடுக்க
தமிழுண்டு எப்போதும்
ஆத்தோரம் உலகம்
கண்ட நாகரிகம்
அனாதையாய் அறுந்து நிக்கிது
ஆதரவின்றி
மண்ணும் மழைமட்டும்
மாறுதிங்கே
காலந்தோறும்
நண்டும் மண்புழுவும்
வயல் வெளியும்
நாணி மறையுது
உழவின்றி
உன் உறவும்
என் உணர்வும்
இனி உலகறிய
கவிபாடி மட்டுமா
தழைக்க போகுது
தமிழ்
செவிக்கினிய
சொல்லால் கூட
வளருமே
செந்தமிழ்.!
பரணியெங்கும்
பரவிநிற்கும்
அமிழ்த தமிழ் நெஞ்சங்களுக்கு..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின். டெக்சாஸ்