"ரத்தம் ஜாலியா இருக்கும்.. ஆனா இந்த முட்டை இருக்கே.. அய்யோடா".. ஒரு திடீர் தொடர் (4)
ஆல்பிரட் ஹிட்சாக்.. இந்தப் பெயரைப் பார்த்து பீதி அடையாத நபர்களே இருக்க முடியாது. திரையுலகில் ஷாக் சரித்திரம் படைத்த இயக்குநர்.
பெரிய அளவில் டெக்னாலஜிகள் எதுவும் இல்லாத நிலையிலும் கூட தனது திரையாக்கத்தால், ரசிகர்களை தத்ரூபமாக பயமுறுத்தி வியர்க்க வைத்து படம் பார்க்க வைத்தவர்.
இவரது படங்களில் வரும் காட்சியமைப்புகளை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இன்று வரை முத்திரைப் படங்களாக இவரது அத்தனை படங்களும் திகழ்கின்றன.

ஹிட்சாக்கின் மறுபக்கம்
எல்லோரையும் போலத்தான் ஹிட்சாக்குக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அது ரொம்ப சுவராஸ்யமானது.. இவரா இப்படி என்று ஆச்சரியப்படவும் வைக்கும். எல்லோரையும் பயப்பட வைக்கும் ஹிட்சாக்குக்கும் சிலதைக் கண்டால் பயம் வருமாம்.. அதாவது அயே என்று அலர்ஜி அடைய வைக்குமாம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.. ஆனால் அதுதான் உண்மை.

ரத்தம் பிடிக்கும்
"சதக் சதக் வென்று யாராவது எதிரே உட்கார்ந்து சரமாரியாக வெட்டினால் கூட பயப்படாமல் தைரியமாக நின்று பார்ப்பேன்.. ரத்தம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரத்தம் அழகானது.. அது மட்டுமல்ல.. அந்த கலர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ஆனால் எனக்குப் பிடிக்காத ஒரு கலர் என்றால் அது மஞ்சள்தான்" என்று கூறுகிறார் ஹிட்சாக்.

முட்டை பிடிக்காது
ஏன் மஞ்சள் பிடிக்காது என்று கேட்டால், "எனக்கு முட்டை பிடிக்காது. முட்டை என்றாலே பயந்து விடுவேன். ஒரு மாதிரி ஆகி விடும். அதைப் பார்த்தாலே அறுவெறுப்பாக இருக்கும். அதிலும் முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கரு என்றாலே காத தூரம் ஓடி விடுவேன். அதனாலேயே எனக்கு மஞ்சள் நிறத்தின் மீதும் கூட வெறுப்பு வந்து விடும். ஒரு நாளும் நான் முட்டையை சாப்பிட்டது இல்லை" என்று கூறி கண்களில் பீதியை கொண்டு வந்து நிறுத்துவார் ஹிட்ச்சாக்.

பார்த்தாலே ஒரு மாதிரி
என்னங்க இது, வியர்க்க விறுவிறுக்க பீதியூட்டும் படங்களை எடுக்கறீங்க.. இப்படி முட்டைக்குப் பயப்படுகிறவரா இருக்கீங்களே என்று கேட்டபோது, "அதென்னவோ தெரியலை.. எந்த இடத்திலும் ஓட்டை இல்லாமல் ஒரு மாதிரியான ஷேப்பில் இருக்கும் முட்டையைப் பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரி ஆகி விடும்" என்று சிரித்தபடி கூறுவார் ஹிட்ச்சாக். அத்தனை பெரிய மனிதருக்குள்.. இத்தனை சிறிய பயமிருந்திருக்கு பாருங்க.

ஒரு அவார்டு கூட கிடைக்கலை
ஹிட்ச்சாக் எடுத்த படங்கள் எல்லாமே மாஸ்டர் பீஸ்தான்.. .தி பேர்ட்ஸ், ரியர் வின்டோ, ஸ்பெல்பவுன்ட், சைக்கோ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் என்ன கொடுமை தெரியுமா.. அவர் உலகப் புகழ் பெற்ற படங்களை இயக்கியும் கூட அவருக்கு ஒரு முறை கூட சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது இல்லை. இத்தனைக்கும் அவரது பல படங்கள் இறுதிப் போட்டி வரை போயுள்ளன. சைக்கோ படத்துக்குக் கூட அவருக்கு அவார்டு கிடைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமே.!
மனித வாழ்க்கையே ஆச்சரியங்கள் நிறைந்ததுதானே.. அதில் ஹிட்ச்சாக் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன!
(தொடரும்)












Click it and Unblock the Notifications