"எழுந்து வா குட்டா".. கதறி அழுத பிரம்மதச்சன்.. யானைக்குள் ஒரு குழந்தை.. ஒரு திடீர் தொடர் (3)
வயதாகி விட்ட பெற்றோரை தூக்கி ரோட்டில் வீசும் பிள்ளைகள்.. சொத்துக்காக அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகள்.. மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள்.. கணவருக்கு துரோகம் செய்யும் மனைவிகள்.. இப்படிப்பட்ட கதைகளைத்தான் நாம் நாள்தோறும் பார்த்து வருகிறோம்..
மனிதனைப் போல ஒரு மோசமான விலங்கினம் பூமிப் பந்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது. செடி கொடிகள், விலங்குகள் படைக்கப்பட்ட நாள் முதல் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் இந்த மனிதன் மட்டும் எப்படி மாறிப் போயிருக்கிறான்.
விலங்குகளுக்கு ஒரு அறிவு குறைவு என்பார்கள்.. ஆனால் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும்போது மனிதர்களை விட உயர்ந்த அறிவு கொண்டவை விலங்குகள்தானோ என்று எண்ண வைக்கிறது.. கேரளாவில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

யானையிடம் பாசம் வைத்த குட்டன்
பிரம்மதச்சன் என்ற யானையை தனது பிள்ளை போல வளர்த்து வந்த அதன் பாகன் ஓமனக்குட்டன் திடீரென மரணமடைகிறார். தகவல் அறிந்ததும் விரைந்தோடி வருகிறான் பிரம்மதச்சன்.. வீட்டின் முன்பு கிடத்தப்பட்டுள்ள ஓமனக்குட்டனை வேகமாக நெருங்கிய அந்த யானை, தனது துதிக்கையை அசைத்து அசைத்து வா வா என்று கூப்பிடுகிறது. கண்ணில் நீர் வழிந்தோடுகிறது. எழுந்து வா.. எங்கே போய்ட்டே என்று கேட்பது போல துதிக்கையை ஆட்டி ஆட்டி அழுதபடி தனது பாகனை எழுப்ப முயற்சிக்கிறது.

வா அப்பா!
ஆனால் தன்னை பிள்ளை போல வளர்த்த இந்த அப்பன் இனி வர மாட்டான் என்று தெரிந்து கொண்டு பெரும் சோகத்துடன் அந்த இடத்தை விட்டு மெல்ல கிளம்பிச் செல்கிறது யானை வடிவத்தில் உள்ள அந்த குழந்தை. எத்தனை பெரிய உருவம்.. ஆனால் அதன் மனசில்தான் எத்தனை பெரிய அன்பு, பாசம்.. ஊரே யானையின் இந்த பாசப் பதறலைப் பார்த்து கலங்கிப் போயுள்ளது.

பிராணிகளின் பாசம்
உலக உயிரினங்களின் வரலாற்றைப் பார்த்தால் மனிதனை விட நிறைய அன்பும், பாசமும் கொண்டவை விலங்குகள்தான் என்று புரியும். விலங்குகளைப் போல பாசம் வைக்க யாராலும் முடியாது. நாயிடம் பாசம் வைத்துப் பாருங்கள்.. நீங்கள் சாகும் வரை உங்களை விட்டு விலகாது. ஒவ்வொரு விலங்கும் எத்தனை எத்தனை உசத்தி என்பதை அதனிடம் பழகிப் பார்த்தால்தான் தெரியும்.

இது பால்டோவின் கதை
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் வரலாறு படைத்த பல விலங்குகளை நாம் அறிய முடியும். அமெரிக்காவில் ஒரு நாய் இருந்தது. அதன் பெயர் பால்டோ.. இது 1925ல் நடந்த கதை. மிகவும் விசுவாசமான நாய். விசுவாசம் என்பதை விடவும் மிகவும் தைரியமான நாயும் கூட. அலாஸ்காவின் நோம் நகரைச் சேர்ந்த பால்டோ அந்த ஊர் மக்களுக்கு மிகப் பெரிய உபகாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்த தீரமான நாய்.

நாயின் தீரச் செயல்
அந்த சமயத்தில் ஊரில் டிப்தீரியா பெரு நோய் பரவி பல குழந்தைகளது உயிர்களைக் காவு வாங்கி வந்தது. டாக்டர்கள் பெருமளவில் போராடிப் பார்த்தனர். இந்த நேரத்தில் முக்கியமான ஒரு மருந்தை ஒரு தொலை தூர நகரில் இருந்து வரவழைக்க வேண்டியிருந்தது.. அந்த நகரானது நோம் நகரிலிருந்து கிட்டத்தட்ட 800 மைல் தூரத்தில் இருந்தது. ஒரு பக்கம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். மறுபக்கம் மருந்து விரைவாக கிடைக்காத சூழல். என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த டாக்டர்களுக்கு ஒரு ஐடியா வந்தது. "ஸ்லெட் டாக்ஸ்" எனப்படும் பனிப் பிரதேசங்களில் வண்டி இழுக்க பயன்படுத்தப்படும் நாய்களைப் பயன்படுத்தி இந்த மருந்துகளைக் கொண்டு வர தீர்மானித்தனர்.

சாமர்த்தியம்
இதையடுத்து பால்டோ என்ற நாயின் தலைமையில் ஒரு நாய்ப் படையை அனுப்பி வைத்தனர். வழியெங்கும் பல இடர்பாடுகளை சந்தித்தாலும் பால்டோ மற்றும் சக நாய்கள் மிகப் பிரமாதமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வேண்டிய மருந்துகளை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்த்தன. இந்த நாய்களிலேயே பால்டோவின் செயல்பாடுதான் மிகவும் புத்திசாலித்தனமாகவும், துரிதமாகவும் அமைந்தது. பல இடர்பாடுகளையும் பொருட்படுத்தாமல் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சரியான நேரத்தில் மருந்தைக் கொண்டு வந்து சேர்த்தது பால்டோ.

ரோமாபுரி கொடூரன்
பால்டோவின் இந்த தீரமான செயலைப் பாராட்டி நோம் நகரில் சிலையே வைத்துள்ளனர். வரலாற்றிலும் இடம் பிடித்தது பால்டோ. விலங்குகளின் தீரம் இப்படி இருக்க.. ஒரு மோசமான மனிதன் குறித்த கதையையும் இங்கு பார்ப்போம். அவனது பெயர் காலிகுலா. ஒரு காலத்தில் ரோம் நகரை கட்டியாண்ட மன்னன். மிகவும் மோசமான குணம் படைத்தவன். இவனது பொழுதுபோக்கு என்ன தெரியுமா.. தனக்குப் பிடிக்காதவர்களை தலையைத் துண்டித்துக் கொல்வதுதான். அது யார், என்னவென்றெல்லாம் பார்க்க மாட்டான்.. வெட்டிப் போட்டுட்டு போய்ட்டே இருப்பான்.

குதிரைப் பாசம்
இப்படிப்பட்ட பைத்தியக்காரனுக்கும் மனசில் கொஞ்சம் ஈரம் இருந்திருக்கும் போல. ஒரு செல்லப் பிராணி வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு குதிரையை வாங்கி வளர்க்க ஆரம்பித்தான். அதற்கு இன்சிடேட்டஸ் என்று பெயரும் இட்டான். சும்மா சொல்லக் கூடாது.. மிக மிக செல்லமாக வளர்த்து வந்தான். ராஜ உபச்சாரம்தான். அதை தனது மந்திரியாகவும் பிரகடனம் செய்தான். அந்த அளவுக்கு பாசமாக வளர்த்து வந்தான்.

பாசத்தைக் கொட்டி
அந்தக் குதிரை தங்க சகல வசதிகளுடன் கூடிய கூடம் அமைத்தான். அதைக் கவனிக்க ஏராளமான ஆட்களை நியமித்தான். அது சாப்பிட விலை உயர்ந்த சாப்பாடுகளை வரவழைத்தான்.. எப்படியெல்லாம் அதை சிறப்பாக கவனிக்க முடியுமோ. அப்படியெல்லாம் செய்தான். அந்தக் குதிரையைப் பற்றித்தான் ரோம் மக்களும் வியந்து வியந்து பேசினார்கள். இந்தப் பைத்தியக்காரனுக்கு இப்படி ஒரு நல்ல புத்தியா என்றும் ஆச்சரியப்பட்டனர்.

இதுதான் மனித குணம்
இப்படியாக போய்க் கொண்டிருந்த அந்த குதிரையின் ராஜ வாழ்க்கையில் ஒரு நாள் சோகம் வந்து சேர்ந்தது.. ஆம் பைத்தியக்காரன் காலிகுலா, அந்தக் குதிரையை ஒரு நாள் தலையைத் துண்டித்துக் கொன்று விட்டான். ஏன் எதற்கு என்று காரணமே கிடையாது.. வந்தான், வாளை எடுத்தான்.. ஓங்கி தலையை வெட்டிக் கொன்று விட்டு போயே விட்டான்.. கொஞ்சம் கூட அதற்காக அவன் வருத்தப்படவே இல்லை.
இப்போது சொல்லுங்கள்.. மனிதனை விட மிகப் பெரிய சல்லிப் பயல் யாராவது இருக்க முடியுமா!
(தொடரும்)
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications