திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 75000 கிலோ முடி காணிக்கை ஏலம்..எத்தனை கோடி வசூல் தெரியுமா?
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த 75,500 கிலோ தலை முடி ரூ.27.66 கோடி ஏலத்தில் விற்பனை ஆனது. தலை முடி விற்பனை மூலம் மட்டுமே தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.200 கோடி வரை லாபம் கிடைக்கிறது.
நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி கோயிலுக்கு நிகராக அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம். பெருமாளுக்கு கேசவன் என்ற பெயரும் உண்டு அந்த கேசவனுக்கு தங்கள் கேசத்தை பக்தர்கள் காணிக்கையாக்குகின்றனர்.
திருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு.
திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம்..பக்தர்களே ஆன்லைன் முன்பதிவு ரத்து..தேவஸ்தானம் அறிவிப்பு
தலைமுடி காணிக்கை
இறைவனுக்கு முடியைக் காணிக்கை ஆக்குவதன் மூலம் நம் உயிரையே இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம் என்பதே அதன் தாத்பர்யம். பணம் ,பொருள் ஆகியவற்றைக் காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது விசேஷமானதாகக் கருதப்படவும் இதுவே காரணம். தினமும் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வணங்குகிறார்கள். பெருமாளும் அதை மானசீகமாக ஏற்று பக்தர்களுக்கு அருள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் காணிக்கை மூலம் வழங்கப்படும் முடி ஏலம் விடப்பட்டு கோடிக்கணக்கான பணம் திரட்டப்படுகிறது. அந்தப் பணமும் தேவஸ்தானத்தின் மூலம் திருப்பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.
குவியும் பக்தர்கள்
இரண்டு ஆண்டு கொரோனா முடக்கத்திற்கு பின் இந்தாண்டு திருமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பல கோடி வருமானமும் கிடைத்து வருகிறது. கோடை விடுமுறை அதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த 75,500 கிலோ தலை முடி ரூ.27.66 கோடி ஏலத்தில் விற்பனை ஆனது.
எத்தனை கோடி வருமானம்
பக்தர்கள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கும் தலைமுடியை அவற்றின் நீளம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு வகைகளாக பிரித்து தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது.தலை முடி விற்பனை மூலம் மட்டுமே தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.200 கோடி வரை லாபம் கிடைக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தலைமுடி ஏலத்தில் 75 ,500 கிலோ தலை முடி 27 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆனது.
ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால், அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19ம் தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 20ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயிலில் சுத்தம் செய்து மூலிகை கலவை கோயில் சுவர்களில் தெளிக்கப்படும். இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.