ஆயுதபூஜை, விஜயதசமி கோலாகலம் : வீடுகளில் படையலிட்டு சரஸ்வதியை வழிபட்ட மக்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமானோர் சரஸ்வதி தேவிக்கு படையலிட்டு வழிபட்டனர். விஜயதசமி தினமான இன்றும் மறுபூஜை செய்து தங்களின் தொழில் சிறக்கவும் கல்வியில் சிறந்து விளங்கவும் பலரும் வேண்டிக்கொண்டனர்.
மதுரை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடியில் தொழில் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு காலையிலேயே குடும்பத்துடன் வந்து பூஜை செய்து படையலிட்டு வழிபட்டனர். வீடுகளிலும் ஏராளமானோர் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. வெற்றிநாளான விஜயதசமியை முன்னிட்டு பல கோவில்களில் வித்யாரம்பம் நடைபெற்றது.
கொரொனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆயுதபூஜை கொண்டாட்டம் முடங்கியிருந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி போன்ற பொருட்களின் விற்பனை களைகட்டியது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்கு அதிகரித்தது. பூஜை பொருட்களை வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
ஆயுதபூஜையையொட்டி வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் மக்கள் சுத்தம் செய்தனர். இறைவனுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை படைத்து மக்கள் ஆயுதபூஜையை உற்சாகமாக கொண்டாடினர். நேற்றிரவு வரை கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடியில் தொழில் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு காலையிலேயே குடும்பத்துடன் வந்து பூஜை செய்து படையலிட்டு வழிபட்டனர். வீடுகளிலும் ஏராளமானோர் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்தால் போதும் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி பூஜையை வீடுகளில் வழிபடப்பட்டது. புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ வைத்து வழிபட்டனர். விஜயதசமி நாளான இன்றைய தினம் மறுபூஜை செய்து இறைவனை வழிபட்டனர்.
பல ஊர்களிலும் ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களின் ஆட்டோக்களை சுத்தம் செய்து அலங்கரித்தனர். சூடம் ஏற்றி காண்பித்து வழிபாடுகள் செய்தனர்.
விஜயதசமி வித்யாரம்பம் கோலாகலம்
நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கல்வி , கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள்.
மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு , இசைக் கருவிகள் , நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி , புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டது.
மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தான அ..,ஆ.. ஓம் என்ற எழுத்தை எழுத வைத்தும், நாவில் தேன் வைத்து எழுத்துக்களை உச்சரிக்க செய்தனர்.
சேலத்தில் வித்யாரம்பம்
Recommended Video
சேலம் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து பச்சரிசியில் தமிழ் எழுத்துக்களை மோதிர விரலால் எழுத வைத்தனர். தொடர்ந்து அனைவரும் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான எண்ணிக்கையை விட நடப்பாண்டு குறைந்தளவு குழந்தைகளே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.