கோவை தமிழக, கேரள மக்களின் ஆசையில் மண்.. மரப்பாலம் சுரங்கப்பாதை பணியில் சிக்கல்
கோவை: தமிழ்நாடு - கேரளாவை இணைக்கும் முக்கிய புள்ளியாக கோவை உள்ளது. தினசரி இரு மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. வர்த்தக ரீதியாகவும் தமிழ்நாடு - கேரளாவை இணைக்கும் பகுதியாக கோவை உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சனை காரணமாக மரப்பாலம் சுரங்கப்பாதையை மாற்றியமைக்கப்படும் என கடந்த மே மாதம் அறிவித்தனர். ஆனால் ரயில்வே துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மோசமான தகவல் தொடர்பால் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் பகுதி என்பது தமிழ்நாடு - கேரளா எல்லையான, சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. கோவை வழியாக கேரளா செல்வதற்கும், கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழ்நாடுக்குள் நுழைவதற்கும் இந்த வழியாக தான் செல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை, அங்கு ரயில்வே பாலத்துக்கு கீழ் உள்ள சிறிய சுரங்கம் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் செல்லும்.

போக்குவரத்து நெரிசல்
இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களுக்கும் அதுதான் வழி. மொத்தமே 5.5 மீட்டர் தான் அகலம். ஒரே நேரத்தில் எதிர் எதிரே வாகனங்கள் செல்ல முடியாது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சனை அதிகரித்து கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் மருத்துவமனை சிகிச்சைக்கு கூட செல்ல முடியாதளவுக்கு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதுவும் வீண் எண்ட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் 2 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும். இதற்கு பயந்தே மக்கள் மதுக்கரை மார்க்கெட் வழியாக 4 கி.மீ தொலைவு சுற்றி சென்று வருகிறார்கள். சாலை மற்றும் சுரங்கத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.
மாற்றப்படும் சுரங்கப்பாதை
இதையடுத்து சுரங்கத்தை இடித்துவிட்டு புதிய சுரங்கம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. 9 மீட்டர் அகலத்தில், மொத்தம் இரண்டு பாலம் கட்டி 4 வழிப்போக்குவரத்தாக மாற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அரசு கடந்த மே மாதமே பணிகளை தொடங்கி, போக்குவரத்து மாற்றத்தை அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக வாகனங்கள் மாற்று வழியாக தான் செல்கின்றன.
மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறையின் பனிப்போர் காரணமாக இந்தப் பணி நிறைவடையாமல் காலம் தாழ்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள், பணி நடைபெறும் இடத்தில் குடிநீர் குழாய், மின்சார இணைப்பு ஆகியவற்றை தமிழக அரசு மாற்றவே இல்லை. அரசு நிர்வாக ரீதியாக அனுமதியும் வழங்கவில்லை என்று புகார் சொல்கிறார்கள்.
பணிகள் தாமதம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ, அவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் மிக எளிதாக முடிந்துவிடும். பிரச்சனை அதுவல்ல. சுரங்கப்பாதை வடிவமைப்புக்கு ரயில்வே துறை இன்னும் ஒப்பதல் வழங்கவில்லை. என்று புகார் கூறுகிறார்கள். இந்தப் பணிகளுக்காக நிலம் கையப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்திற்கும் சேர்த்து சுமார் ரூ.100 கோடி ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் நிர்வாக ரீதியாக அனுமதி கொடுக்காத காரணத்தால் பணிகள் முடங்கியுள்ளன. நிர்வாக அனுமதி கொடுக்காமல், நிதி ஒதுக்காமல் நாங்கள் ஒப்புதல் வழங்க முடியாது என ரயில்வேதுறை கைவிரித்துவிட்டது. இதனால் பணிகள் தொடங்கப்படாமல் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. மதுக்கரை நகராட்சி மூலம் குடிநீர், மின்சார இணைப்பை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications