குரு பெயர்ச்சி: மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியானார் குரு பகவான்..பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள்
தஞ்சாவூர்: நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியானர்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள் லட்சார்ச்சனைகள் நடைபெற்றன. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்,திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த தலம் குருபகவானுக்கு உகந்த தலமாக போற்றப்படுகிறது. இங்க குரு பகவானுக்கு தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். இத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாற்று கரையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பாற்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்ததால் ஆபத்து சகாயர் என்னும் பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது ஆலங்குடி எனும் பெயரும் இவ்வூருக்கு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலம் ஆகிய ஆலங்குடி மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் முப்பெருமை கொண்டது. புகழ் பெற்ற இத்திருத்தலத்தில், இன்று நடைபெற உள்ள குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பகவானுக்கு லட்சார்ச்சணை நடைபெற்றது. இரவு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதே போல தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
ஜோதிலிங்கம் தோன்றிய திட்டை பிரளய காலத்தில் உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டபோது இறைவன் ஜோதிலிங்கமாக ஒரு மேட்டுப்பகுதியில் அருள்பாலித்தார். அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கம், மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி, அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும், அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார். இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை ஆகும்.
இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்கு குருபவகான் சாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனிச்சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.
குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது இங்கு குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். இந்த ஆண்டு குருபகவான் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
குருப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக அடுத்தமாதம் மே 1ஆம் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணம் ரூ.300 ஆகும்.
மே மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பரிகார ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ.500 ஆகும். மேலும் இந்த குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி வருகிற 23ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. 23ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு ஹோம பூஜை நடக்கிறது. 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
கோவிலில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பயன்பெறலாம் என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்கும் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு யாகம் இன்று மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 11.27 மணிக்கு குருப்பெயர்ச்சி மகா தீபாராதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications