திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கா? - உங்க ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கு
குடும்ப வாழ்க்கையில் கணவனோ,மனைவியோ சரியாக அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரமாகும். நவகிரகங்களின் ஆதரவு இருந்தால் குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும்.
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ஆம் வீடு குடும்ப ஸ்தானமான 2 ஆம் அதிபதிகளின் இணைவும் அல்லது தொடர்புகளும் குடும்பத்தை நிலையாக இருக்க வைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குடும்பம், களத்திர ஸ்தானங்களும், அதிபதிகளும் நன்றாக அமைந்திருந்தால் முதல் தரமான வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை அமையும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சிலருக்கு திருமணம் தாமதமாகிறது. சிலருக்கோ காதல் திருமணம் நடக்கிறது. திருமணம் செய்து கொண்டவர்களின் பலரது வாழ்க்கை போர்க்களமாக உள்ளது. பெரும் பணக்காரர்களோ பிரபல நட்சத்திரங்களோ ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்து செய்கின்றனர். இதற்குக் காரணம் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் கூட்டணிதான்.

மண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம். திருமண விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் முக்கியம்.
களத்திர ஸ்தானம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. குடும்ப ஸ்தானமும் சரியாக அமையவேண்டியது முக்கியம். முதலாவதாக, ஒருவரின் லக்னாதிபதிக்கு ஏழாமாதிபதி நட்பென்று அமைந்தால் சிறப்பு. அல்லது சமம் என்றாலும் பாதிப்புகள் இல்லை, பகை என்னும் போதுதான் இது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. பகை எனும்போதே எல்லோருக்குமே பிரச்சினை என்று முடிவு கட்டக்கூடாது இது பொதுவான விதிதான்.
ஜாதகத்தில் 7 மற்றும் 9 ஆம் அதிபதிகள் இணைவு அல்லது அவர்களின் தொடர்பால் திருமண இணைவு மற்றும் கூட்டானது பரஸ்பரம் பாக்கியமாக இருக்கும். அல்லது 2,9 ஆம் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்புகள் இருந்தாலும் வாக்கில் இனிமை, நிலையான வருமானம் கிடைத்து வாழ்க்கைப் பயணம் நன்றாகச் செல்லும், மன நிறைவும் நிம்மதிகளும் உண்டாகும்.
களத்திர ஸ்தானமான 7ஆம் வீடு குடும்ப ஸ்தானமான 2 ஆம் அதிபதிகளின் இணைவும் அல்லது தொடர்புகளும் குடும்பத்தை நிலையாக இருக்க வைக்கும். இந்த நான்கு அமைப்புகளும் ஒருவரின் ஜாதகத்தில் விதியாகி அமைந்திருந்தால் முதல் தரமான வெற்றி வாழ்க்கையும் அமையும்.
ஜாதகத்தில் யோகாதிபதிகள் சந்திரனுக்கு 10, 11 ஆம் இடங்களில் இருந்தாலும் நல்ல செயல்பாடுகள், நல்ல தொழில் ஜீவனம் என அமைந்து எல்லையில்லாத மகிழ்ச்சி நிலவும். 4,9 ஆம் அதிபதிகளின் தொடர்புகளும் வாழ்க்கையில் சுகமான பாக்கியங்களைச் சேர்க்கும்.
சுப கிரகங்களான குரு, சுக்ரன், புதன், வளர்பிறை சந்திரனின் பார்வை 7 ஆம் வீட்டிற்கு கிடைக்கும்போது இது நன்மையடையும். 8 ல் ஒரு சுபர் இருந்தாலும் குடும்பம் தழைக்கும்.இப்படியான அமைப்புகளில் ஒருவரின் விதி இது சம்பந்தமாக எழுதப்பட்டிருந்தால் திருமணத்திற்குப் பின் வாழ்க்கையே ஒரு நல்ல திருப்புமுனையாகித் திரும்பும்.
ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் கூட்டணி போட்டு அமைந்து இருந்தால் திருமண வாழ்வு நரக வாழ்கையாகி விடும். ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தாலோ சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும். சிறப்பான மனைவி அமையமட்டார். சனி செவ்வாய் இணைந்து ஏழாம் இடத்தில் இருந்தால் பெண்கள் இளம் வயதில் துணைவரை இழக்கும் நிலை ஏற்படும்.
லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டியிருக்கும். சனி ராகு இணைந்து மகரம், கும்பத்தில் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும், திருமணவாழ்வு பிரச்சினையாகும், சண்டை சச்சரவு ஏற்படும். சில வீட்டில் கொலையே நடக்கும். விபரீத முடிவுகள், விவாகரத்து, பிரிவு ஏற்படும். அந்த இடத்தை சுபர் பார்த்தால் பிரச்சினை தீரும்.
எப்படியிருப்பினும், ஒரு லக்னத்திற்கு, ஏழாம் ஸ்தானம் கொஞ்சமாவது நன்றாக இருந்தால்தான் திருமண வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். அசுப கிரகங்கள் 7,2,8,9 ஆம் ஸ்தானங்களில் தொடர்பு ஏற்பட்டால் குடும்ப வாழ்க்கையில் கவலைகளும் துன்பங்களுமே ஏற்படும்.
ஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடமாகும். இந்த இடம் ஆயுள், மாங்கல்யம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளும் இடம். இந்த எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி எந்தக் கிரகமோ அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்த்து விடலாம்.
ஒருவர் மனைவியை நல்ல முறையில் உள்ளங்கையில் வைத்து பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். குடும்பத்தில் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை என்று அர்த்தம்.
திருமணத்திற்கு முன்பு கணவன், மனைவியின் குணநலன்களை அறிந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வாயில்லா பூச்சிக்கு வாயாடி மனைவி அமைந்து வாட்டி வதைத்து விடுவார். ஆண் ஜாதகத்தில் 2ஆம் இடமான வாக்கு ஸ்தானதிபதி நீச்சமாகி அங்கு சுப கிரகம் இருந்தால் அவர் அமைதியானவர். அதே போல பெண் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானதிபதி உச்சமாகி அங்கு பகை கிரகம் இருந்தால் வாயாடி மனைவியாவாள். சிலரது ஜாதகத்தில் என்னதால் கிரகங்கள் ஏடாகூடமாக இருந்தாலும் குடும்பத்தில் குழப்பங்கள் ஏதுமின்றி சந்தோஷமாகவே வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் அதற்கான காரணத்தை கேட்டால் விட்டுக்கொடுத்து செல்கிறோம் என்பார்கள். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுங்கள் வாழ்க்கை கெட்டுப்போகாது நிம்மதியாக சந்தோஷமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications