திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலைக்கு ஆரஞ்ச் அலெர்ட் - தீபாவளிக்கு மழை வெளுக்கும்
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது.
குமரிக் கடல், இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவுறுத்தி இருந்தது வானிலை மையம்.

கொட்டித்தீர்த்த மழை
தமிழகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலை நகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர்,திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை
சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் மதுரவாயில், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடலூரில் 13 செமீ மழை, நன்னிலம் பகுதியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடத்தில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட்
இதனிடையே வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி,டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தீபாவளி நாளில் கனமழை
நவம்பர் 4ஆம் தேதி தீபாவாளி தினத்தன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை
நவம்பர் 05 மற்றும் 06ஆம் தேதிகளில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்று முதல் 4ஆம் தேதி வரைக்கும் கேரளா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 05 மற்றும் 6ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கர்நாடகா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications