ஆனி திருமஞ்சனம்... ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் - படையலிட்டு வழிபாடு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இன்றைய தினம் பெரிய தளிகை எனப்படும் படையலிடப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
திருச்சி: ஆனி கேட்டையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனைப் போல வாழ்வு அமையும் தலைமைப் பதவி தேடி வரும் என்பது நம்பிக்கை. அதுபோல ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனத்தை தரிசனம் செய்து பெரியதளிகை பிரசாதம் பெற்று உண்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நேற்றைய தினம் காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
ஆனி மாதம் ஜேஷ்டா மாதம் எனப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 23ஆம் தேதி ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெற்றது.
இதனையடுத்து நேற்றைய தினம் ஆனி 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

காவிரி ஆற்றில்
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று கோவில் வழக்கப்படி அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

யானை மீது ஊர்வலம்
காவிரி ஆற்றில் 1 தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரிக்கப்பட்டது. தங்கக்குடத்தில் உள்ள புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

ஸ்ரீரங்கநாச்சியார்
28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், நாச்சியார் பரிஜனம் ஆகியோர் தோளில் சுமந்தும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்ட புனித நீர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரங்கநாச்சியார்
முன்னதாக தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

வருடாந்திர பராமரிப்பு
இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டி வேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

படையல் இட்டு வழிபாடு
இன்றைய தினம் தாயார் சன்னதியில் திருப்பாவடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

என்னைப் பெற்ற தாயார்
இதே போல திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் சமேத பக்தவச்சலம் பெருமாள் கோவிலில் உற்சவர் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.வேலை இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமாளையும் தாயாரையும் வழிபட நினைத்த காரியங்கள் தங்கு தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications