பங்குனி மாத பலன்: அலட்சியம் காட்டினால் ஆபத்து.. கடக ராசியினர் பங்குனியில் பெறும் பலன்கள் முழு விவரம்
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடிடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுக்க சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் நண்பர்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். எல்லா வகையிலும் செல்வாக்கு உண்டாகும். பிள்ளைகள் நீண்டநாள்களாக கேட்டுக் கொண்டிருந்த இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வீர்கள். திடீர் பயணங்கள், சுற்றுலா செல்லும் வாய்ப்புண்டு.
உங்களுடைய ராசிக்கு 8 ஆம் இடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்து உட்கார்ந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் பழிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் இருந்தால் வழக்கறிஞரைப் பார்த்து என்ன நிலைமையில் உள்ளதென்று கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. அலட்சியப் போக்கை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
சூரியன் 9 ஆவது வீட்டில் அமர்ந்திருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சனையாக இருக்கும் சூழல் இருந்தாலும், ஒவ்வொரு பிரச்சனையாக தீரக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் உண்டாகும். வேலை ஆட்களை வேலைக்கு எடுக்கும்போது இதற்கு முன்பு எங்கு வேலை செய்தார்கள் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டு எடுப்பது நல்லது. இதனால், வியாபாரம் லாபகரமானதாக இருக்கும். ஆனால், போட்டிகளால் லாபம் குறையக்கூடிய வாய்ப்புள்ளது.
உத்தியோகத்தில் அவசர முடிவெடுக்காமல் இருக்க வேண்டும். அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தேகத்தால் சந்தோஷ குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணைக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும்.
இந்த மாதம் முழுக்க உங்களுக்கு நல்லவை எல்லாம் நடப்பதற்கு ஸ்ரீ முருகப் பெருமானை வணங்குவது நல்லது. கால்களை இழந்தவர்களுக்கு உதவுவது நன்மை பயக்கும். பச்சரிசி தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications