சபரிமலையில் குவியும் பக்தர்கள்: ஐயப்பனை இரவு 11 மணிவரை தரிசிக்க அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று முதல் இரவு 11 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பெருவழிப்பாதை வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பவதால் பேட்டைத்துள்ளி ஆடி வந்து பக்தியுடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினசரியும் 45 ஆயிரம் பக்தர்களும் பின்னர் 60 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
41 நாட்கள் நடந்த வழக்கமான பூஜைகளுக்கு பிறகு கடந்த 26ஆம் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
நெய்யபிஷேகம்
நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலை 4.30 மணி முதல் 11 மணி வரை ஏராளமான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பெருவழிப்பாதையில் அனுமதி
சபரிமலையில் தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுவதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வந்தனர். 2 ஆண்டுக்கு பின்னர் நேற்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 35 கி.மீ. தூரமுள்ள இந்த வனப்பாதையில் 12 இடங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு
எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் எருமேலி கோழிக்கடவில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இரவு 11 மணி வரை தரிசனம்
பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருவாபரண ஊர்வலம்
அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்த குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஜனவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12 ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படும். மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.