மாங்கனித் திருவிழா 2021: பெண்ணாகப் பிறந்து இறைவனோடு இணைந்த காரைக்கால் அம்மையார் கதை
சாதாரண புனிதவதியாக பிறந்து வளர்ந்த பெண் சிவனடியாராக காரைக்கால் அம்மையாராக மாறியது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
தூத்துக்குடி: பிறந்தது முதலே சிவ பக்தியோடு திகழ்ந்தவர் காரைக்கால் அம்மையார். எல்லாம் சிவன்தான் சிவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று வழிபட்டதால் சிவனோடு கலந்த 63 நாயன்மார்களில் ஒருவராக கலந்தவர். மாங்கனித் திருவிழா நடைபெறும் இன்றைய தினம் காரைக்கால் அம்மையாரின் கதையை படித்தாலே தனி பக்தி ஏற்படும்.
புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட அவர் சிறு வயது முதலே சிவஆலயத்தை சுத்தம் செய்வது, கோலமிடுவது, அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவந்து தருவது, விளக்கேற்றுவது மட்டுமே இன்றி தன் இல்லம் தேடிவரும் சிவ பக்தர்களை வணங்கி உணவிட்டு வந்தார்.
தேவர் குல வீணை வித்வானாகிய தும்புருவின் புத்திரியான சுமதி, சிறந்த சிவபக்தை. ஒரு நாள் அவர்கள் இல்லம் வந்த துர்வாச முனிவரை, சிவ வழிபாட்டில் மூழ்கியிருந்த சுமதி கவனிக்காததால், கோபம் கொண்டு சுமதியை மானிடப்பிறப்பு எடுக்க சாபமிட்டார். இதனால் பூவுலகில் அவதரித்தார்.
காரைக்கால் அம்மையார் புராண கதை
காரைக்கால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காரை வனமாக இருந்தது. இங்கு சிறந்த வைசிய குடும்பத்தில், தனதத்தன் - தர்மவதி தம்பதியருக்கு மகளாக அவதரித்தாள். மிகச் சிறந்த அழகிய பெண்ணாக வளர்ந்தாள். அவருக்கு புனிதவதி எனப் பெயரிட்டனர்.
பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். திருமண வயது அடைந்தவுடன், நாகபட்டினத்தில், பொன் ஆபரண வியாபாரியான பரமதத்தர் என்பவரை மண முடித்து வைத்தனர்.
கணவனுக்கு தொண்டு செய்து இறைவனைப் பாடியபடியே திருமண வாழ்க்கையை தொடர்ந்தார். ஒருநாள் பரம தத்தரிடம் ஒரு வியாபாரி 2 மாம்பழங்களை கொடுத்தார். அதனை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினார்.
அப்பொழுது புனிதவதியின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி வந்தார். வழக்கம் போல அவருக்கு உணவு படைத்து ஒரு மாங்கனியும் அளித்து, அவரை வணங்கி வழி அனுப்பி வைத்தார். பின்னர் மதிய உணவிற்கு வீடு வந்த பரமதத்தர் , மாங்கனியை தரும்படி கேட்டார். ஒருமாங்கனியை தந்தார். அது மிகவும் ருசியாக இருந்ததால், இன்னொரு மாங்கனியையும் கேட்டார்.
புனிதவதி சமையல் அறை சென்று, சிவபெருமானை வேண்டினார்."மெய் மறந்து நினைந்து, உற்ற இடத்து உதவும் விடையவர்தான் தம்மனம் கொண்டு உணர்தலுமே" என்றதும், அவரது கையில் ஒரு மாம்பழம் வந்தது.
அம்மையார் அதனை தன் கணவனுக்கு கொடுத்தார். இது மிகவும் அதீதமான சுவையுடன் இருந்தது. அதனால் புனிதவதி அம்மயாரிடம் கேட்க, நடந்தவற்றை கூறினார். ஆனால் அதை நம்பாத பரமதத்தன், புனிதவதி அம்மையாரிடம், இது உண்மையெனில், மற்றுமொரு மாம்பழத்தை வரவழைக்க ஆணையிட, அது போலவே சிவ பெருமானை வேண்டினார்.
அப்பொழுது மறுபடியும் அவரது கையில் மாம்பழம் வந்தது. இதைக்கண்ட பரமதத்தன், புனிதவதி ஒரு தெய்வப் பிறவி என்பதை அறிந்து, அவருடன் தாம்பத்தியம் கொள்வது கூடாது என்று தீர்மானித்தார். நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து சென்றார்.
மதுரைக்கு வந்த பரமதத்தர் மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார்.
பரமதத்தர் குலசேகரப்பட்டிணம் சென்று வாணிபம் செய்து வந்தார். இது அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு குலசேகரப்பட்டினம் சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.
பேய் உருவம் தாங்கிய அம்மையார், 'அற்புத திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார்.
அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.
அம்மையாரிடம் என்ன வேண்டும் என்று சிவன் கேட்க, "பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டெனில் உன்னை மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி, அறவா நீ ஆடும் பொழுது, உன் அடியின் கீழ் இருக்க" என்று வேண்டினார். சிவபெருமான் அப்படியே அருள்செய்தார். அதன்பிறகு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், அங்கும் தலைகீழாகவே நடந்து வந்து தரிசனம் செய்தார். அவருக்கு சிவ பெருமான் தன் திருத்தாண்டவம் காட்டி, திருவாலங்காட்டிற்கு வந்து தன் திருவடிக் கீழ் இருக்க அருளினார். காரைக்கால் அம்மையாரை இசைத்தமிழால் இறைவனைப் பாடியவர்களில் முதலாமவர் ஆகும். இவர் இயற்றிய "அற்புதத் திருவந்தாதி" "திருவாலங்காட்டு சிவப்பதிகம்" "திரு இரட்டை மணிமாலை" போன்ற நூல்களை இயற்றி தமிழக்கு பெருமை சேர்த்தார்.
குலசேகரப்பட்டிணத்தில் பேயுருவம் பெற்ற அன்னையை வணங்கும் வகையில் இன்றைக்கும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
மாங்கனித் திருவிழா : பேயுருவத்தில் வந்த காரைக்கால் அம்மையார்...திருவாலங்காட்டில் ஆட்கொண்ட இறைவன்