வாயில் எலும்பு...ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விடிய விடிய மயான பூஜை - சாமியாடிய பக்தர்கள்
பொள்ளாட்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் விடிய விடிய மயான பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண் பக்தர்கள் சாமியாடினர்.
பொள்ளாச்சி: புகழ்பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற மயான பூஜையில், அம்மனின் கழுத்துப் பகுதியில் இருந்து மண் எடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்களில் சிலர் சாமி வந்து ஆடினர். மயான பூஜை இன்று அதிகாலை 2:45 மணிக்கு முடிவடைந்தது.
Recommended Video
கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற கோயில், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயில். இங்கு அம்மன் சயன கோலத்தில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இக்கோயிலில் மாசி மாத குண்டம் திருவிழா கடந்த 1ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதை முன்னிட்டு, நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

8 அடி உயர மாசாணி அம்மன்
மயான அருளாளி அருண் மற்றும் தலைமை முறைதாரர் உள்ளிட்ட பல முக்கிய அருளாளிகள் அம்மனின் ஆயுதமான சூலம், பூஜை சாமான்களுடன் அருகிலுள்ள ஆழியாற்றங்கரை மயானத்திற்கு சென்றனர். அங்கு சுமார் எட்டு அடி நீளத்தில் மயான மண்ணால் மாசாணி அம்மனின் உருவம் அமைக்கப்பட்டது.

புனித தீர்த்தம்
இதையடுத்து, அருளாளி, ஆழியாறில் புனித நீராடிவிட்டு, தீர்த்தம் எடுத்து வந்தார். பின்பு, அதிகாலை 2:30 மணியளவில் பம்பை மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அங்கு கூடியிருந்த பக்தர்களின் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அம்மனின் பீடம் எலுமிச்சை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பம்பைக்காரர்கள் அம்மனின் பக்திப் பாடல்களை பாடினர்.

அருள் வந்து ஆடிய பூசாரி
அங்கிருந்த அருளாளிக்கு சாமி அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக்கொண்டும், கையில் சூலாயுதத்தை வைத்துக்கொண்டும் ஆவேசமாக ஆடினார். கூடவே, அம்மனின் உருவத்தை சிதைத்தார். அப்போது, அம்மனின் கழுத்துப் பகுதியில் இருந்து கைப்பிடி மண் எடுக்கப்பட்டது. இப்பூஜையில், பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் சாமி வந்து ஆடினார்கள். பின்னர் அதிகாலை 2:45 மணியளவில் மயான பூஜை முடிவடைந்தது.

கும்ப ஸ்தாபனம்
இன்று காலையில் ஆழியாற்றங்கரையில் மாசாணி அம்மன் கோயிலின் தலைமை குருக்கள் கும்பஸ்தாபனம் செய்தார். அம்மன் உருவத்தின் கழுத்துப் பகுதியில் இருந்து திரும்பவும் மண் எடுக்கப்பட்டு, சக்தி கும்பஸ்தாபன கலசத்துடன் கோயிலின் மூலஸ்தானத்தில் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications