2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்
2019ஆம் ஆண்டு முடிய இன்னும் நான்கு மாதங்கள் இருந்தாலும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்துள்ளது. காரணம் புதிய திட்டமிடல்கள் அதிகம் இருக்கும். எனவே மேஷம் முதல் மீனம
சென்னை: 2020 ஆண்டில் உலக அரங்கில் இந்தியா வல்லரசாகும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டார் மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம். இன்னும் 4 மாதங்களில் 2020 ஆம் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ ஆனால் திருவாளர் பொதுஜனமாகிய நமக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். பிறக்க இருக்கிற புத்தாண்டில் பொருளாதாரம், புதிய வேலை, திருமணம், தொழில் வளர்ச்சி, லாபம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் கும்பத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
புத்தாண்டு பிறக்க இன்னும் 4 மாதம் இருக்கும் போதே எதற்கு புத்தாண்டு பலன்கள் என்று பார்க்கிறீர்களா சிலருக்கு புதிய திட்டமிடல்கள் இருக்கும். வெளிநாடு போகலாமா வேண்டாமா என்ற யோசனைகள் இருக்கும். திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டு முடியுமா என்றும் சில ராசிக்காரர்கள் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்கள்.
2020 ஆம் புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். ராகு கேது பெயர்ச்சி 2020ஆம் ஆண்டு கிடையாது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியின் படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்கள் தனித்தனியாக கொடுக்க இருக்கிறோம். அதற்கு முன்னதாக இது மொத்தமாக மின்னல் வேகத்தில் நீங்கள் படித்து முடிக்க உங்களை உற்சாகப்படுத்த இந்த 2020 புத்தாண்டு ராசி பலன்களை கொடுத்து இருக்கிறோம் படியுங்கள்.
மேஷம் - யோகம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களே. பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். பத்தாம் அதிபதி பத்தில் அமரப்போகிறார். குருபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அமரப்போகிறார். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் தன்னம்பிக்கை கூடும். நீங்கள் பட்ட கடன்கள் அடைபடும். திருமணம் கைகூடி வரும் அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. தொழில் செய்வர்களுக்கு லாபம் கூடும். பேச்சிலராக இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் 90 கிட்ஸ் கவலைப்பட வேண்டாம் 2020ல் பலருக்கு கெட்டிமேளம் கொட்டும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் 2020ஆம் புத்தாண்டு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. மலைமேல் இருக்கும் முருகனை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் - அதிர்ஷ்டம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள். காரணம் அஷ்டம சனி இடப்பெயர்ச்சியாகி பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். அதிர்ஷ்டம் கைகூடி வரப்போகிறது. தடைபட்டு வந்த காரியங்கள் தடங்கள் இன்றி நிறைவேறும். குருபகவான் 8 ல் அமர்வதால் கவலை வேண்டாம் அவரும் அதிசாரமாகவும் வருட இறுதியிலும் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார வளர்ச்சி அதி அற்புதமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் விலகும். கடன்கள் குறையும். சினிமா ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையும். காரணம் 2ஆம் வீட்டில் உள்ள ராகு மீது குருவின் பார்வை விழுவதால் வெற்றிகள் தேடி வரும். அறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள் அற்புதங்கள் நடக்கும்.
மிதுனம் - லாபம் நிறைந்த ஆண்டு
புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டில் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி, களத்திர ஸ்தானத்தில் குரு இருந்தாலும் உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் எந்த பிரச்சினை வந்தாலும் எளிதில் கடந்து விடுவீர்கள். தடைகள் எல்லாம் தகர்ந்து விடும். நன்மைகள் அதிகம் நடக்கும். பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். எந்த செயலை செய்யும் முன்பும் பொறுமையாக யோசித்து நிதானமாக செய்யுங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியடையும். வீடு சொத்து வாங்கும் முன் யோசிப்பது அவசியம். தொழில் லாபம் அதிகரிக்கும். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைய திருநள்ளாறு சென்று வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.
கடகம் - சவால்கள் நிறைந்த ஆண்டு
சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே... கடந்த பல ஆண்டுகளாகவே அதி அற்புதமான பலன்களை அனுபவித்து வந்த கடக ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சனிபகவான் கண்டச்சனியாக அமர்கிறார். ஆறாம் வீட்டில் குருபகவான் அமர்கிறார். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இல்லாவிட்டாலும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறும் தெம்பு கிடைக்கும். போட்டிகளில் எதிர்ப்பு இருந்தால்தான் அதை கடந்து வெற்றி பெறும் வேகம் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உடம்புக்குள் இருந்த நோய்கள் வெளிப்படும். கடன்கள் வாங்க வேண்டாம். மருத்துவ செலவுகள் வரும். 2020ஆம் ஆண்டு கடகம் ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் எனவே சவாலை சமாளிக்க திருச்செந்தூரின் கடலோரத்தில் எழுந்தருளும் சுப்ரமணியரை சரணடையுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிம்மம் - வெற்றிகள் தேடி வரும்
சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. ஆண்டு துவக்கத்தில் பஞ்சம ஸ்தானத்தில் குரு, ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி அமைவதால் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட கடன்கள் இன்று அடைபடும். வருடம் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடங்க முயற்சி செய்வீர்கள். கடன்கள் தீரும். வருடம் முழுக்க கோள்களின் சஞ்சாரத்தினால் வெற்றிகள் கைகூடி வரும் மாதம். புதிய வேலை கிடைக்கும். அதிகம் வெற்றிகள் கிடைக்க இந்த ஆண்டு சோலைமலையில் எழுந்தருளும் முருகப்பெருமானையும் அழகர் மலையில் குடிகொண்டிருக்கும் சுந்தரராஜ பெருமாளையும் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கன்னி - பொருளாதார வளம்
புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ஆண்டு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. காரணம் ஐந்தாம் வீட்டில் சனிபகவான் அமரப்போகிறார். உங்களின் கஷ்டங்கள் குறையும் கவலைகள் மாறும். நான்காம் வீட்டில் குரு அமர்ந்தாலும் குருவின் பார்வையால் திருமண முயற்சிகள் கைகூடி வரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் கை கூடி வருகிறது. இந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கலாம். பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. மேலும் நன்மைகள் நடைபெற அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள் அற்புதங்கள் நிகழும்.
துலாம் - புகழ் தேடி வரும்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே 2020ஆம் புத்தாண்டில் அர்த்தாஷ்டம சனி காலம் என்றாலும் சனி ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்காது காரணம் சனிபகவான் உங்கள் ராசியில் உச்சமடைகிறார். குரு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்வதாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது. சொத்துக்கள் வீடு வாங்குவீர்கள். பேர் புகழ் தேடி வரும். குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இந்த ஆண்டு குன்றில் மேலிட்ட விளக்காக சுடர்விட்டு பிரகாசிப்பீர்கள். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெற நீங்க வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர். சனிக்கிழமையில் காவிரியில் குளித்து ரங்கநாதரை தரிசனம் செய்ய வெற்றிகள் தேடி வரும்.
விருச்சிகம் - சிறப்பான ஆண்டு
செவ்வாய் பகவானை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே. கடந்த ஏழரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, இன்னல்களால் மூச்சுவிட முடியாமல் தவித்து வந்தீர்கள். எப்படா விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கித்தவித்தீர்கள். பிறக்கப் போகும் புத்தாண்டு உங்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. ஏழரை சனி முடியப்போகிறது. நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக பட்ட அவமானங்கள், வேதனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. சனி முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். குரு குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் கடன்கள் அடைபடும். சனிபகவானால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை நீடிக்க திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு - காரியத்தில் கவனம்
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. உங்களுக்கு தலைமேல் ஜென்ம சனியாக அமர்ந்து கொண்டிருந்த சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். தலைவலி நீங்கும். எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும். குடும்ப சனியால் குழப்பங்கள் தீரும். வாக்கு சனியால் நீங்கள் பேசும் வார்த்தைகளில் நிதானமாக இருப்பது நல்லது. குருபகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆட்சி நாதன் ஆட்சி பெற்று அமர்வதால் பல அற்புதங்கள் நிகழும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதையும் நிதானமாக தேர்வு செய்து முடிவு செய்யுங்கள். இல்லாவிட்டால் ஏழரை சனி காலத்தில் படாத கஷ்டங்கள் பட வேண்டியிருக்கும். பேச்சிலும் நடையிலும் நிதானம் தேவை. பாத சனி படுத்தி எடுக்கும். கால்வலியை ஏற்படுத்தும் என்பதால் ஏழைகள் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். செருப்பு தானம் செய்யுங்கள்.
மகரம் - நிதானம் தேவை
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. பிறக்கப்போகும் புத்தாண்டி கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகவே இருக்கிறது என்றாலும் ராசி நாதன் ஆட்சி பெற்று ஜென்மசனியாக ராசியில் அமர்கிறார். குருபகவான் விரைய குருவாகவும் ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் இருப்பதால் செய்யும் வேலைகளை யோசனை செய்து நிதானமாக இருப்பது நல்லது. புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகமாக வரும். கடவுளின் கருணை அபரிமிதாக இருக்கிறது. நன்மைகள் அதிகம் நடைபெற நீங்க வணங்க வேண்டிய தெய்வம் குச்சனூர் சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கும்பம் - லாபம் அதிகரிக்கும்
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனி தொடங்குது. குரு பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வது அற்புதம். கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல விசயங்களாகவே நடந்துட்டு இருக்கு. இப்போது சனிபகவான் விரைய சனியாக ஏழரையை தொடங்குவதால் உங்களுக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. அதே நேரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெரிய முதலீடு எதையும் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. தொழில் மூலம் கிடைக்கும் லாப பணத்தை சேமித்து வைப்பது நல்லது சுப விரைய செலவுக்கு பயன்படுத்துங்கள். ஏழரை சனி பாதிப்பு குறைய ஆஞ்சநேயரை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
மீனம் - வெற்றிகரமான ஆண்டு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. 2020 ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் குரு, சனியின் சஞ்சாரம் உங்களை கை தூக்கி விடும். லாப ஸ்தானத்தில் வரும் சனியால் தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கொட்டும். பத்தாம் வீட்டில் அமரும் குரு புதிய வேலைகளை ஏற்படுத்தி தருவார் புதிய தொழில் தொடங்கலாம். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் உங்கள் கை ஒங்கியே இருக்கும். எனவே 2020ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. நன்மைகள் நடைபெறும் அதிகம் நடைபெறும் ஆண்டாகவும் அமையப்போகிறது. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் பெருமாள் கோவிலில் தாயாருக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கு போட்டு வணங்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.