மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் இத்தனை கோவில்களா? தரிசித்தால் கோடி புண்ணியம்
கோவில்களுக்குப் பெயர் போனது மதுரை. மதுரையிலும், நகரைச் சுற்றிலும் பல கோவில்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
மதுரை: பழம் பெரும் நகரமான மதுரை கோவில் நகரமாக போற்றப்படும் அளவிற்கு ஏராளமான கோவில்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமல்லாது இம்மையில் நன்மை தருவார் ஆலயம்,கூடலழகர் பெருமாள் கோவில் என நகரின் மையப்பகுதியிலேயே சிறப்பான கோவில்கள் உள்ளன. எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களைப் பற்றி கூறியுள்ளோம் மதுரைக்கு வரும் பக்தர்கள் இந்த ஆலயங்களை தவறாமல் தரிசித்து செல்லலாம்.
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். தூங்கா நகரம், கூடல் நகர் என்றும் சிறப்பு பெற்றது. சுமார் 2500 ஆண்டுகள் பழமையான மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது இந்த மாநகரம்.

மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் புராண கதைகள் கூறுகின்றன. பழமையான நகரமான மதுரையில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களைப் பார்க்கலாம்.
மதுரையில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் முதன்மையானது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில். இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தைப்பூச தெப்பத்திருவிழா சிறப்பு வாய்ந்தது.
இம்மையிலும் நன்மை தருவார் கோயில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது. மதுரையை ஆண்ட சிவபெருமானே இந்த ஆலயத்தை கட்டியதாக புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.
சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில்,கூடல் அழகர் பெருமாள் கோவில், காமாட்சி ஏகாம்ரேஸ்வரர் கோவில், சித்தநாதசுவாமி கோயில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளன.
மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் நீர் தலமாக போற்றப்படுகிறது. சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்', இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்', தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்.மதுரைக்கு வருபவர்கள் இந்த ஆலயங்களை தரிசித்து செல்வது சிறப்பு.

வண்டியூர் மாரியம்மன் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில்,மதுரை முத்தையாசுவாமி கோயில் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயம்.
ஆணையூர் ஐராவதீஸ்வரர் கோயில் இந்திரனின் யானை ஐராவதம் வந்து இங்கு சாப விமோசனம் பெற்ற தலமாகும். யானை வந்து வழிபட்டதால் ஆணையூர் என்ற பெயர் பெற்றது.
ஆரப்பாளையம் புட்டு சொக்கநாதர் கோயிலில் புட்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறும். புட்டுக்கு மண் சுமந்த லீலை அரங்கேற்றப்படும்.
அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் சிறப்பான இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். கள்ளழகரின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.
பழமுதிர்சோலை சுப்ரமணிய சுவாமி கோவில் அறுபடைவீடுகளில் ஆறாம் படை விடாக போற்றப்படுகிறது. அழகர் மலை மேல் உள்ள ராக்காச்சியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த காவல் தெய்வம்.
நாகமலை தீர்த்தம் நாகமலை நாகேஸ்வரர் கோயில், நிலையூர் முனியாண்டிசுவாமி கோயில் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய ஆலயம்.
திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் முருகப்பெருமானின் முதல் படை வீடாக போற்றப்படுகிறது. திருமங்கலம் குருநாதர்சுவாமி கோயில், திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களாகும்.
திருவாதவூர் திருமறைநாதர் கோயில், திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில், தென்கரை மூலநாதசுவாமி கோயில்
ஒத்தக்கடை நரசிம்மர் கோவில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களாகும்.












Click it and Unblock the Notifications