ஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14ல் தொடக்கம் - 22ல் தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிதம்பரம்: பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22ம் தேதி தேர்த்திருவிழாவும், 23ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.
சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.
சிதம்பரம் நடராஜரை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவரது திருநடனமும், அந்த நடனத்தை காட்டி அருளிய திருவாதிரை திருநாளும்தான். சிவனுக்கு உகந்தது திருவாதிரை நட்சத்திரம்.

திருவாதிரை திருவிழா
மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும். இந்த ஆண்டுக்கான விழா 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய காலை, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.

மகா தீபாராதனை
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருளுவர். பின்னர் கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜ தீட்சிதர் சிறப்பு பூஜைகள், பன்னிரு திருமுறை வழிபாடு நடைபெற்று, காலை 8மணியளவில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.

திருவாதிரை அபிஷேகம்
தினமும் சிவாகமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22ம் தேதி மார்கழி தேரோட்டம் நடைபெறுகிறது. 23ம் தேதி நண்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.

களி சாப்பிடுவது ஏன்
திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்.












Click it and Unblock the Notifications