குரு பெயர்ச்சி 2020: ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி நீச்சபங்க ராஜயோகத்தை தரப்போகுது
குரு பெயர்ச்சி இன்னும் சில வாரங்களில் நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. கஷ்டங்கள் காணாமல் போகப்போகிறது.
சென்னை: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நீச்ச பங்க ராஜயோக அமைப்பை தரப்போகிறது. குருவின் பார்வை ஒருபக்கம், பாக்ய ஸ்தான குருவின் சஞ்சாரம் மறுபக்கம் என இந்த குரு பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது.
குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது.
குரு பகவான் சுப கிரகம். பொன்னவன், குரு பார்வை கோடி நன்மையை கொடுக்கும். தனுசு ராசியில் குரு இருந்த போது கேது உடன் இருந்தார். நிறைய நாட்கள் வக்ரமடைந்தும் சஞ்சரித்தார் இதனால் நிறைய பலன்களை சில ராசிக்காரர்கள் பெற முடியாமல் போய்விட்டது. இப்போது குரு பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்ற சனியோடு இணைந்த நீச்சபங்கமடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி
கடந்த சில ஆண்டு காலமாகவே ரிஷபம் ராசிக்கு குருவும் சனியும் சாதகமாகவே இல்லை. அஷ்டம சனி காலத்தில் கூடவே அஷ்டம குருவும் சேர்ந்து கஷ்டத்தை கொடுத்தது. கடந்த ஒரு வருடமாகவே பாடாய் படுத்தி எடுத்தது. வீண் பழி, அவப்பெயர் ஏற்பட்டது. குடும்ப வாழ்க்கையில் கஷ்டங்கள் கவலைகள் ஏற்பட்டது. நிகழப்போகும் குருப்பெயர்ச்சியால் துன்பங்களும், துயரங்களும் தீரப்போகிறது.
பண வரவு அதிகரிக்கும்
குரு பகவான் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு சென்று தனது ஐந்தாம் பார்வையால் ரிஷபம் ராசியை பார்க்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தன்னம்பிக்கை தைரியம் பிறக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
பிரச்சினைகள் நீங்கும்
குரு பகவானின் ஏழாம் பார்வை உங்க ராசிக்கு 3ஆம் வீட்டின் மீது விழுகிறது. சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களை விட்டு விலகிப்போனவர்கள் உங்களை நாடி வருவார்கள். நண்பர்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
தன்னம்பிக்கை நன்றாக அதிகரிக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றம்
குரு பெயர்ச்சியால் தொழில் வளர்ச்சியடையும். முயற்சிகள் வெற்றியடையும். தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடி வரும். புத்திர ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
பொருளாதார வளர்ச்சி
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். காதல் திருமண வாழ்க்கையில் கூட சில பிரிவுகளை சந்தித்து இருப்பீர்கள். வீண் பழி சொல் நீங்கும். அவமானங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. பொருளாதார தடைகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
குரு பெயர்ச்சி பரிகாரம்
குரு மகரம் ராசியில் நீச்சம் பெற்று அமர்ந்தாலும் ஆட்சி பெற்ற சனியோடு அமர்வதால் பிரச்சினைகள் நீங்கும். பட்டம் பதவிகள் தேடி வரும் நீச பங்க ராஜயோக அமைப்பினால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தூர தேச பிரயாணங்கள் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நிம்மதியான உறக்கம் வரும். குரு பெயர்ச்சி காலத்தில் துர்க்கை வழிபாடு, காளி அம்மனை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.