குரு பெயர்ச்சி பலன் 2024: ரிஷபத்தில் குரு கன்னி ராசியில் கேது.. 2024ல் யாரெல்லாம் கோடீஸ்வரர்?
சென்னை: 2024ஆம் ஆண்டில் கிரகங்களின் சேர்க்கை பார்வையால் சிலர் திடீர் கோடீஸ்வரர் ஆகும் யோகம் கைகூடி வரப்போகிறது. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்குமா? லாட்டரியில் ஜாக்பாட் அடிக்குமா? யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் சுப கிரகம் குரு பகவானின் பார்வையும் சஞ்சாரமும் ஒரு ராசிக்காரருக்கு சாதகமாக இருந்தால் அவருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரும். மேஷ ராசியில் தற்போது அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நேராக பயணம் செய்யப்போகிறார். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்வார் குரு பகவான்.

பொதுவாகவே சாதாரண நிலையில் பிறந்தாலும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். நன்றாக படித்து நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதித்து பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள் அதற்கேற்ப முயற்சி செய்து கோடீஸ்வரர் ஆன பலரை இன்றைக்கு நாம் பார்த்திருக்கும். தொழில் தொடங்கி பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக உயர்ந்தவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
குருவிற்கு கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 திரிகோண இடங்களான 1, 5, 9 இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். குரு, கேது கெடாமலும், குரு, கேது கேந்திர திரிகோணங்களில் இணைந்து நின்றாலும்் தன் புத்தி, உழைப்பால் கோடீஸ்வரராகிவிடுவர். குரு, கேது இணைவும் கோடீஸ்வர யோகத்தை தரும்.
கேதுவிற்கு குரு பகவானின் பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும்.
கோச்சார ரீதியாக கேது தற்போது கன்னி ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசியில் உள்ள குரு பகவான் இன்னும் சில மாதங்களில் அதாவது மே மாதம் முதல் ரிஷப ராசிக்கு செல்லும் போது கேதுவிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. அந்த மாதம் முதல் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கைகூடி வரப்போகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை கிடைப்பதால் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்குமே கோடீஸ்வர யோகம் கிடைக்கிறது.
அதே போல குரு பகவானின் பார்வை விழும் விருச்சிக ராசிக்காரர்கள், மகரம் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் கைகூடி வரப்போகிறது. குரு பயணம் செய்வதை பொருத்து மேஷம், கடகம் ராசிக்காரர்களுக்கும் அபரிமிதமான பண வருமானம் கைகூடி வரும். இதனால் கோடி கோடியாக செல்வம் சேரும் யோகம் தேடி வரப்போகிறது.
பிறப்பால் கோடீஸ்வரர் ஆக பிறக்கும் யோகம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பணக்காரர்களாக வாழ்வார். 9ஆம் அதிபதியுடன் சுபகிரகங்கள் இணைந்து லக்னாதிபதி பலம் பெற்றால், தந்தை முன்னேற்றம் பெற்று, அவர் மூலம் பணம், புகழ் பெறுவர்.
ஜாதகத்தில் பாக்ய ஸ்தான அதிபதி எனப்படும் 9ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத் தரும். சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, நீச பங்கம் முதலான வகைகளில் பலம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தில் 2, 9, 11ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தால், குடும்பத்தினரால் பாக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெற்று, பெரும் செல்வந்தராக வாழ்க்கை நடத்துவர்.
தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.
ஜாதகத்தில் 10ம் அதிபதி, 11ம் அதிபதி பலம் பெற்று சுபகிரக பார்வை பெற்றாலும், 10, 11ஆம் அதிபதி இணைந்து 4,9 இடங்களில் இருந்தாலும், 4, 9ம் அதிபதியின் பார்வை பெற்றாலும் தொழிலில் லாபம் பெருகி அதன் மூலம் கார், பங்களா என்று சுகமாக வாழ்வர். 10, 11ம் அதிபதிகள் பாதிக்கப்படாமல் இருந்து தசை நடைபெற்றால் தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும். ஜாதகத்தில் சுக ஸ்தானத்தில் லக்னாதிபதியோ, 2, 5, 9, 11ம் அதிபதிகள் நின்றாலோ வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சம் இருக்காது. சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். பிறந்த ஜாதகத்தில் 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும்.
இன்றைக்கு பலரும் சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம் இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்று பலரும் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்தை விட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிந்து செயல்பட்டால் நீங்களும் கோடீஸ்வரர்தான்.












Click it and Unblock the Notifications