மாங்கல்ய வரம் தரும் காரடையான் நோன்பு
பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரடையான் நோன்பு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை: மாங்கல்ய வரம் தரும் காரடையான் நோன்பு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர்.
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
ஆயுள் ஆரோக்கியம்
கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான், தீர்க்க சுமங்கலிய பாக்கியம் கிட்டும். இந்த ஆண்டுக்கான காரடையான் நோன்பு இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11.56க்கு நிறைவடையும். இதனை முன்னிட்டு நாளை ஏராளமான கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கார அடை வெண்ணெய்
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜை செய்யும் இடத்தை மெழுகிக் கொள்ள வேண்டும். பின்னர் தரையில் சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
நோன்பு கயிறு
அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு கயிற்றை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். காரடையான் நோன்பன்று பெண்கள் பால்சார்ந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
கணவனின் ஆயுள் பலம்
தீர்க்க சுமங்கலியா இருப்பதற்கும் விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். கணவரின் முகத்தை பார்த்துக்கொண்டே பூவோடும் பொட்டோடும் ஆயுள் முழுவதும் இருக்க நினைப்பார்கள். இந்த நோன்பு செய்யும்போது அம்மனை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள் கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும்.
திருமங்கலங்குடி மங்களாம்பிகை
'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் அதாவது' உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும்' என்று சொல்லி சரடு கட்டிக் கொள்வார்கள். பஞ்ச மங்களத் தலம்" என்று சிறப்பித்துப் போற்றப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம். ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை. இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம்.
தீர்க்க சுமங்கலி வரம்
தீர்க்க சுமங்கலியாக வாழ சுக்கிரனின் அனுக்கிரகம் முக்கியமாகும். எனவே பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் கணவனுடன் சேர்ந்து சுக்ர ஸ்தலமான ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களை போக்கி தீர்க சுமங்கலி யோகத்தை தரும். தீர்க சுமங்கலி யோகம் பெற விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். இங்கு அம்மையும் அப்பனும் வயோதிகர்களாய் அருள் பாலிப்பது சிறப்பு.