மதுரை அரசாளும் மீனாட்சிக்கு இன்று பட்டாபிஷேகம்... 24ஆம் தேதி சொக்கருடன் திருக்கல்யாணம்
மதுரையில் இன்று முதல் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமாக மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
மதுரை: சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெற உள்ளது. பட்டத்து அரசியாக மகுடம் சூடிய மீனாட்சிக்கு வரும் 24ஆம் தேதி சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். இதனை குறிக்கும் வகையில் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் ஒன்பதாம் நாளாக நாளை திக் விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
ஆந்திரா, தெலுங்கானவிற்கு ஆக்சிஜன் அனுப்பியது ஏன் - தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஹைகோர்ட்
இன்று பட்டம் சூடிய உடன் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்கி விடும். முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான். உங்கள் வீட்டில் மீனாட்சியா? அல்லது சிதம்பரமா?' எனக் கேட்பதும் உண்டு. மதுரையில் இன்றும் வழிபாட்டில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பக்தர்கள் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு, பின்னரே சுந்தரேசுவரரை வழிபடுகின்றனர்.
சித்திரையில் பட்டாபிஷேகம்
முன்பெல்லாம் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் அம்பாளின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார். திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது.
சித்திரை திருவிழா
சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. எட்டாம் நாளான இன்று காலை ஊடல் லீலை நடைபெற்றது. இன்றிரவு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் மட்டுமே அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.
பரிவட்டம், வேப்பம்பூ மாலை
மீனாட்சி அம்மனுக்கு பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் தரப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும்.
பல்லாக்கு குதிரையில் பவனி வரும் மீனாட்சி
பட்டம் சூடிய மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொரோனா காலம் என்பதால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. உள் புறப்பாடு நடைபெறும் போது பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மணக்கோலம் காணும் மரகதவள்ளி
ஒன்பதாம் நாளான நாளை அம்மனின் திக்விஜயம். இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும் அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமானது. சித்திரை திருவிழாவின் உச்சமாக மீனாட்சி அம்மனுக்கு சுந்தரரேஸ்வரருடன் திருக்கல்யாணம். வரும் சனிக்கிழமை 24ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை.
தம்பதி சமேதராக காட்சி
திருக்கல்யாணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் மணக்க தம்பதி சமேதரராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரரேஸ்வரரைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேரில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.