பங்குனி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க இன்று முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
விருதுநகர்: அமாவாசை மற்றும் பங்குனி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க இன்று முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. அதே சமயம், கோடை காலங்களில், வன விலங்குகள் தண்ணீர் தேடி நீரோடை உள்ள பகுதிகளுக்கு வரும் என்பதால், நீரோடை உள்ள பகுதிகளுக்கு சென்று குளிக்கவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்களுக்கு தங்குவதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சித்தர்களின் பூமி என்றும் அரிய வகை மூலிகை வனப்பகுதி என்றும் போற்றப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில் விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், நாள், கிழமை என்று எதுவும் பார்க்காமல் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் சென்றதுண்டு.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தன்று மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா நோய்த்தொற்று அபாயம் முற்றிலும் குறைந்துவிட்ட காரணத்தினால், கோயில் நிர்வாகமும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளது.
பிரதோஷம் மற்றும் 31ஆம் தேதியன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வந்து சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதியை முன்னிட்டு, இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணிவரை மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகின்றது.
வழக்கமாக, கோடை காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லவும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோடை காலங்களில், வன விலங்குகள் தண்ணீர் தேடி நீரோடை உள்ள பகுதிகளுக்கு வரும் என்பதால், நீரோடை உள்ள பகுதிகளுக்கு சென்று குளிக்கவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்களுக்கு தங்குவதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.