சூரிய கிரகணம் 2018: சூரியனை விழுங்கும் ராகு - பரிகாரம் என்ன?
ஜூலை 13ஆம் தேதி ஆனி மாதம் 29ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் காலை 7.18 மணி முதல் 9.43 மணிவரை ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
சென்னை: விளம்பி வருடம் ஆனி மாதம் 29ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்திய நேரப்படி காலை 7.18 மணி முதல் 9.43 மணிவரை ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது இந்தியாவில் தெரியாது.
சூரிய கிரகணத்தின் நிகழ்வு பற்றி வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம்
சூரிய கிரகணம் பிடித்த நேரத்தில் சூரியன் கருவட்டமாகக் காட்சியளிக்கும். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் சூரியன் ஒளிரும். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான்.
ராகுவினால் பாதிப்பு
ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம். ராகு, தென்படும் ராசிக்கு உரியவன். அவனுடன் இணைந்தவன்; அவனைப் பார்ப்பவன். ஆகவே விகிதாசாரப்படி, ராகுவுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம். கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை.
கிரகணம் ஏன்?
பாம்பின் வடிவமென ராகுவைச் சொல்வார்கள். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம். பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய சந்திரர்களைத் துன்புறுத்துகிறான் ராகு என்கிறது புராணம். ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம்.
ராகுவும் கிரக சேர்க்கையும்
காலைச் சுற்றிய பாம்பு, (திருவாதிரை காலில் இருக்கும் ராகு) கடிக்காமல் விடாது என்று ராகுவைப் பற்றி பழமொழி உண்டு. ராகுவிற்கு தனி வீடு இல்லாததால் எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவான். கெட்டவனுடன் ராகு சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவான்.
சூரியன் சந்திரன் ராகு கூட்டணி
சூரியனுடன் இணைந்தால், ஜாதகரின் செல்வாக்கு மங்கி விடும். செயலும் மங்கும். பெருந்தன்மையும் பேராதரவும் அங்கீகாரம் பெறாது. உச்சன் அல்லது வேறு வகையில் பலம் பொருந்திய சூரியனுடன் இணைந்தால், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து, தனித்தன்மையுடன் திகழ்வான். எதிரிகள் தூரமாக செல்வார்கள். சந்திரனுடன் இணைந்தால் சிந்தனை சுணங்கும் செயல் வலுவிழக்கும். பலம் பெற்ற சந்திரனுடன் இணைந்தால், சங்கடம் நேராமல் தடுத்துவிடுவான் ராகு.
புதன் ராகு சேர்க்கை
செவ்வாயுடன் இணையும்போது செயல்படாத செயல்களை செய்வாள். வலுப்பெற்ற செவ்வாயுடன் இணைந்தால், எதிர்ப்பைச் சமாளித்து, எளிதில் முன்னேறலாம். புதனுடன் சேர்ந்தால் தவறான நட்பு ஏற்படும். வலுவுள்ள புதனுடன் இணைந்தால் பக்குவமான அணுகு முறையால் காரியங்களைச் சாதிக்கச் செய்வான் ராகு.
ராகுவும் குருவும்
குருவுடன் இணைந்தால், சௌக்கியங்களை இழக்க வேண்டியிருக்கும். எத்தனை முயன்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் தோல்வியே ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்க, கடமைகளை மறக்கும் நிலை உருவாகும். வலுப்பெற்ற குருவுடன் இணைந்தாலும் சங்கடம் தீரும் ஆனால் சந்தோஷம் இருக்காது. ராகுவின் சேர்க்கையில் குரு செயலிழந்துவிடுவான். அதனை குரு சண்டாள யோகம் என்கிறது ஜோதிடம். நல்லவனின் சேர்க்கை, கெட்டவனை நல்லவனாக்கும். ஆனால் ராகுவின் சேர்க்கை குருவைக் கெட்டவனாக்கிவிடுமாம்.
பெருமை தரும் ராகு
சுக்கிரனுடன் ராகு இணைந்தால் தாம்பத்திய வாழ்வில் சங்கடம் நேரும். தவறான வழியில் செல்வம் பெருகும். பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைய, எதிர்பார்த்த உலகவியல் சுகங்களை அனுபவிக்கலாம். பெரிய மனிதர்களது தொடர்பால் பெருமைகளும் வந்தடையும்.
சனியின் சேர்க்கையால், நண்பர்கள் எதிரிகளாவர். பலம் பொருந்திய சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த வழியில் முன்னேறும் நிலை உண்டாகும் பெருமைகள் தேடி வரும்.
இரண்டு சூரிய கிரகணங்கள்
விளம்பி வருடம் ஆனி 29ஆம் அதாவது ஜூலை 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆடி மாதம் 26ஆம் தேதியன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திரத்தில் பகல் 1.32 மணி முதல் மாலை 5 மணிவரை நிகழும் ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. 30 நாட்களுக்குள் அடுத்தடுத்த சூரிய கிரகணங்கள் நிகழ்வதால் கிரகணம் தெரியும் நாடுகளில் வெள்ளப் பெருக்கும், தீ விபத்தும் ஏற்படும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். எனவே கிரகண நேரம் முடிந்த பின்னர் குளித்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது நன்மை தரும்.