சிவ ஆலயங்களில் சோமவாரப்பிரதோஷம் கோலாகலம் - சிவன் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் சிவ ஆலயங்களில் பிரதோஷ விழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.
சிவ பெருமானுக்கு உகந்த விரதம் பிரதோஷ விரதம். சோமவார தினமான நேற்று சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாவிட்டாலும் வழக்கமாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுசாமி தரிசனம் செய்து வந்தனர்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் உள்ள பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் நேற்று வழக்கம்போல பிரதோஷ விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவ ஆலயங்களிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications