புரட்டாசி முதல் சனி.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள்..விண்ணை பிளக்கும் கோவிந்தா முழக்கம்
சென்னை: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். துளசி தீர்த்தம் அருந்தி பலரும் பெருமாளை வழிபட்டு சென்றனர்.
புரட்டாசி மாதம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெருமாளுக்கான விரதம் தான். பெருமாளுக்கு உரிய மாதமாக புரட்டாசி மாதம் சொல்லப்படுகிறது.
காக்கும் கடவுளான திருமாலுக்கு உரிய மாதமாக புரட்டாசியை சொல்வதால் அந்த மாதத்தில் விரதம் இருந்தால் பெருமாளின் அருள் மட்டுமல்ல அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற்று விடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம்: அறைக்குள் ஒளிந்து இருக்கும் 2 பெண்கள்.. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் தான்
புரட்டாசி சனி விரதம்
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிபகவானால் ஏற்பட்டும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
பெருமாள் கோவில்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி பெருமாள் கோயில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர் கோவிந்தா முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.
திருப்பதி பெருமாள் கோவில்
சென்னை தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோவிலில் பக்தர்கள் நிண்ட நேரம் என்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது . நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் ஸ்தல சமய பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்ட பெருமாள் கோவில்கள்
திருச்சி மாவட்டம் உறையூர் அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், உத்தமர்கோயில் புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில்களிலும், திருகண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில், வடுவூர் கோதண்டராம சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கள்ளழகர் கோவில்
மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் திருக்கோயில், ஒத்தகடை யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் காளமேக பெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோயில், கூடலழகர் பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெருமாள் கோவில், திருவண்ணாமலை கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.