சனிப்பெயர்ச்சி 2020: திருநள்ளாறு நள தீர்த்த குளமும் நளன் தமயந்தி கதையும் - சனி தோஷம் நீங்கும்
புனித நதிகளில் நீராடினால் தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். அப்படித்தான் திருநள்ளாறு நளன் தீர்த்த குளத்தில் நீராடிவிட்டு சனிபகவானை தரிசனம் செய்தாலும் சனிதோஷமும் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சென்னை: சனிபகவான் நீதிமான் என்பதால் தவறு செய்பவர்களுக்கு தக்க தண்டனையை சரியான நேரத்தில் கொடுப்பார். இதுதான் உலகம், இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்பதை ஒவ்வொருவருக்கும் ஒரு கால கட்டத்தில் உணர வைத்து விடுவார். ஏழரை சனி காலத்தில் நள சக்கரவர்த்தியை நாட்டை பிடிங்கிக் கொண்டு குடும்பத்தை விட்டு பிரிய வைத்தவர். சனி பகவான் கொடுக்கும் படிப்பினைகளைப் பற்றி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். மனிதர்களுக்கு சனிபகவான் ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, என பல காலகட்டங்களில் பல சங்கடங்களை கொடுக்கிறார். இது தண்டனை அல்ல படிப்பினை என்று புரிந்து கொள்பவர்கள் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். நளன் தமயந்தி கதையை படிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்.
சனி பகவானுக்கு ஏன் இத்தனை பயம். சனிப்பெயர்ச்சி வந்தாலே ஏன் எல்லோரும் பரிகாரங்களையும் யாகங்களையும் செய்கிறார்கள் என்று யோசிக்கலாம். சனி பகவான் நீதி தேவன் என்பதால் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். எளியவர்களிடம் அதிகார திமிரை காட்டினாலோ அவர்களை இருக்கிற இடம் தெரியாமல் உட்கார வைத்து விடுவார் எனவேதான் நவ கிரகங்களில் சனியின் சஞ்சாரம் மட்டும் பலரை பயமுறுத்துகிறது.
நள தமயந்தி கதையை படிப்பதனால் சனி தோஷம் விலகும் இந்த கதையை படித்து விட்டு பலரும் படிக்கும் வகையில் பகிர்வதன் மூலம் ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனியினால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
சிவகங்கையில்... 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த... பெரிச்சிகோவில் சிவாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா!
முற்பிறவி கதை
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
நளனிடம் பேசிய அன்னப்பறவை
சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். அந்த துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, "உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்" என்றது. தமயந்தியின் அழகைக் அன்னப்பறவையின் மூலம் கூறக்கேட்டார்.
காதல் கொண்ட தமயந்தி
தமயந்தியிடம் அன்னப்பறவை தூது சென்றது. பறவையின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள். அழகான தமயந்தியை சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்களும் விரும்பினர். தமயந்திக்கு சுயம்வரம் நடைபெற்றது. அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.
நளனை பிடித்த ஏழரை சனி
தமயந்தியை திருமணம் செய்ய முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. "இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?" என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
நளனுக்கு கெட்ட நேரம்
சனி பிடித்த காரணத்தால் நளனின் புத்தியில் மாற்றம் ஏற்பட்டது. புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
காட்டில் தவிக்க விட்ட நளன்
காட்டில் இருந்து நள்ளிரவு நேரத்தில் மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த தமயந்தியை ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
உருமாறிய நளன்
தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
நளனை பிடித்த சனி நீங்கியது
நளனை பிடித்திருந்த சனிதோஷம் நீங்கும் காலம் வந்தது. தேரோட்டியாக வந்த நளனை அடையாளம் கண்டு கொண்டாள் தமயந்தி. கார்கோடன் அளித்த அற்புத ஆடையை அணிந்து நளன் தன் அழகான சுயஉருவத்தை மீண்டும் பெற்றார்.
நளன் தனது மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் ஒன்றிணைந்தார். நளன் திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்து அங்குள்ள குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கிய உடன் ஏழரைச்சனி நீங்கியது.
நள தமயந்தி கதையை படியுங்கள்
நளன் முன் சனீஸ்வரர் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். "சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது" என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார். உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்யுங்கள். ஆணவத்திலோ, தலைக்கனத்திலோ ஆடாதீர்கள். அகங்காரம் ஆளையே அழித்து விடும். ஏழரை சனி பிடித்து விட்டதே என்று பயப்படாமல் திருநள்ளாறு சென்று நளன் தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானை வணங்குங்கள். நளன் தமயந்தி கதையை படியுங்கள். நன்மையே நடைபெறும்.