வைகாசி தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமி - கடன் தொல்லை தீர காலபைரவரை கும்பிடுங்க
கால பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு. ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. வைகாசி தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை: வைகாசி முதல்நாள் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு மட்டுமல்ல ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்க வேண்டிய நல்ல நாள். இன்றைய தினம் சதாசிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. பைரவர் நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். எனவேதான் பைரவரை வழிபடுவதன் மூலம் சனியின் சங்கட பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். இன்றைய தினம் மாலையில் விளக்கேற்றி பைரவரை வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கும் கடன் தொல்லைகள் அகலும்.
காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். பைரவர் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.
சொர்ணாகர்ஷண பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் அனைத்து செல்வத்திற்கும் அதிபதியாவார். இவர் இடது கையில் கபாலத்திற்கு பதிலாக அக்ஷய பாத்திரத்துடன் காட்சி அளிப்பார். அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடுவதாக புராணங்கள் கூறுகின்றன. தேய்பிறை அஷ்டமி தினமான இன்றைய தினம் பக்தர்கள் யாருமின்றி கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவருக்கு இன்றைய தினம் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பைரவரின் தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுன ராசியும், மார்பில் கடக ராசியும், வயிற்றில் சிம்மம் ராசியும், இடையில் கன்னி ராசியும், புட்டத்தில் துலாம் ராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக ராசியும், தொடையில் தனுசு ராசியும், முழங்கால்களில் மகர ராசியும், காலில் கீழ்பகுதி கும்ப ராசியும், காலின் அடியில் மீன ராசியும் அமைந்துள்ளன.
கால பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு. ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தேய்பிறை அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள். மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி, மாசி தேய்பிறை அஷ்டமி- மகேஸ்வராஷ்டமி, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம்பகாஷ்டமியாக வணங்கலாம்.
குரு வக்ர பெயர்ச்சி 2020: குரு பகவானால் கோடியில் புரளப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா
சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி,புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு வாய்ந்த தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை மட்டுமல்ல தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். வியாழக்கிழமையான இன்று தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. மாலையில் பைரவரை நினைத்தும் தட்சிணாமூர்த்தியை நினைத்தும் விளக்கேற்றி வணங்கலாம்.