திருப்பதி பிரம்மோற்சவம்: கருட வாகனத்தில் மகரகண்டி, லக்ஷ்மி ஆரம் அணிந்து மலையப்பசுவாமி தரிசனம்
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடவாகன சேவை இன்று நடைபெற்றது. பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடவாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மலையப்ப சுவாமி. வழக்கமாக பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே திருமலைக்கு வந்துள்ளனர். மாட வீதிகளில் வலம் வராமல் ஏகாந்தமாக காட்சி அளித்தார் மலையப்பசாமி.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். திரும்பும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலிக்கும்.
இந்த ஆண்டு கடந்த 19ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நான்கு மாட வீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அனைத்து வாகனங்களில் உற்சவர்கள் கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபம் மற்றும் ரங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை
பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளில் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி
நான்காவது நாளான நேற்று காலை 8 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவரான மலையப்ப சாமி கோபண்ணா அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சாமி அருள்பாலித்தார்.

மோகினி அலங்காரத்தில் தரிசனம்
ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி அசுரர்களை ஏமாற்றினார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

கருட வாகனத்தில் காட்சி
இன்று இரவு கருடசேவை நடைபெறுகிறது. வழக்கமாக கருடசேவையில் எழுந்தருளும் மலையப்பசுவாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை அதற்கு பதிலாக ஏகாந்தமாக தரிசனம் அளித்தார். பக்தர்களுக்கு யாரும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

கம்பீர தரிசனம் கொடுத்த மலையப்பசுவாமி
மலையப்ப சுவாமி இன்றைய தினம் மகரகண்டி, லக்ஷ்மி ஆரம், சகஸ்ரநாம மாலை என மூலவரான ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, வைடூரிய, மாணிக்க, மரகத, பவள, முத்து என நவரத்தினங்கள் மற்றும் நவமணிகளால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, கருடன் மேல் மகா விஷ்ணுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேரில் சென்று தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் இணைய தளம் மூலமாகவும் திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி மூலமும் பக்தர்கள் நேரலையில் தரிசனம் செய்தனர்.

பட்டு வஸ்திரம் அளித்த ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி இன்று திருப்பதி வந்திருந்த ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார். திருமலை ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து கொண்டு ஏழுமலையானுக்கு சமர்ப்பித்த அவர், கருடவாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமியை தரிசனம் செய்தார்.












Click it and Unblock the Notifications