திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றம் - 31ல் திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 31ஆம் தேதி திருக்கல்யாணமும் ஏப்ரல் 1ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக 30ஆம் தேதி முருகப்பெருமானின் பட்டாபிஷேகமும், 31ஆம் தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது கோவிலுக்குள் பூஜை மட்டும் நடைபெற்றது.
கோவிலில் ஓர் ஆண்டுகள் கழித்து பங்குனி திருவிழாவின் முதல் நாளான இன்று மார்ச் 18ஆம் ஆண்டு காலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க இருப்பிடத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து சுவாமி அருள்பார்வையில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் மகா அபிஷேகமும் தீப தூப ஆராதனையும் நடந்தது. திருவிழாவையொட்டி காலையிலும் இரவிலுமாக தினமும் ஒருவாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 30ஆம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி சுப்பிரமணிய ஸ்வாமி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக ஏப்ரல் 1ஆம் தேதி மலையை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
கடந்த வருடம் கொரோனா காரணமாக திருக்கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications