திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வந்த சுப்ரமணியசுவாமி - பக்தர்கள் பரவசம்
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்ரமணியசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை நேரத்திலும் மாலையிலும் தெப்பத்தில் மிதந்த தேரினை ஏராளமான பக்தர்கள் வடம்
மதுரை: தை மாத தெப்பத்திருவிழா திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்ரமணியசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை நேரத்திலும் மாலையிலும் தெப்பத்தில் மிதந்த தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முருகப்பெருமானின் முதல்படை வீடு என்ற பெருமைக்குரிய மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலை வேளைகளில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், புஷ்ப வாகனம், ரிஷப வாகனம், ரத்தின சிம்மாசனம், பச்சை குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பரங்குன்றம் தேரோட்டம்
தை கார்த்திகையையொட்டி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிறிய வைர தேரில் சுவாமி எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளிலும் கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சுப்ரமணியர் தெப்ப உற்சவம்
இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தெப்பத்திற்கு எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தினை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6.30 மணிக்கு மின்னொளியில் மீண்டும் சுவாமி தெப்பத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் மலையெங்கும் எதிரொலித்தது.

சுந்தரேஸ்வரர்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 6ஆம் நாள் திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8ஆம் நாள் மச்சகந்தியார் திருமண காட்சியும் நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
10ஆம் நாள் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், 11ஆம் நாள் அனுப்பானடியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா பிப்ரவரி 8ஆம்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவார்கள். பின்னர் பக்தர்கள் அங்கு வடம் பிடித்து இழுத்து தெப்பத்தை 2 முறை வலம் வருவார்கள். பின்னர் சுவாமி மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.












Click it and Unblock the Notifications