திருச்சூரில் பூரம் திருவிழா களைகட்டியது: நூற்றுக்கணக்கான யானைகள் அணிவகுப்பை ரசித்த மக்கள்
திருச்சூர் பூரம் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளின் அணிவகுப்பை காணவே, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கேரளாவிற்கு வருகை தருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளை காண்பதே தனி அழகுதான்.
திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் புகழ் பெற்ற பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகள் அணிவகுப்பை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
மலையாளத்தில் மேடம் மாதத்தில் பூர நட்சத்திர நாளில் இந்த திருவிழா வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
திருச்சூர் பூரம் திருவிழா இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைககள் ஒருமாதகாலத்திற்கு முன்னரே துவங்கிவிடும். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
நேற்றைய தினம் தொடங்கிய விழாவில் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகள் அணிவகுத்தன. முன்னதாக திருச்சூர் சுற்றுப்புற கோயில்களின் யானைகள் ஊர்வலமாக வந்து வடக்குநாதரை வணங்கிய பின் பஞ்சவாத்தியங்கள் முழங்க விழா தொடங்கியது. இதில், கணிமங்கலம் சாஸ்தா, சூரக்கோட்டுக்காவு, நெய்தலைக்காவு, செம்புக்காவு, திருவம்பாடி மற்றும் பாரமேற்காவு ஆகிய கோயில் யானைகள் வீதியுலா வந்து வடக்குநாதர் சிவனை வணங்கின.
செண்டை மேளம் கச்சேரி
திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய அம்சமாக வடக்குநாதர் கோயில் வளாகத்தில் செண்டைவாத்யம் நடந்தது. செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுவது ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேளம் அடிப்படையிலான இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வடக்கும்நாதன் கோயிலின் முன் இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும்.
அணிவகுத்த யானைகள்
பாரமேக்காவு மற்றும் திருவெம்பாடி பகவதி அம்மன் கோவில்களில் இருந்து திடம்புகள் தாங்கிய யானைகள், திருச்சூரில் உள்ள தேக்கின்காடு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டன. அதன்பின்னர் தெற்கோட்டு இறக்கம் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பாரமேற்காவு பகவதியம்மன் கோயில் யானைகள் தெற்குகோபுரவாயில் வழியாக மைதானத்தில் அணிதிரண்டு பஞ்சவாத்யத்தாளத்திற்கு ஏற்ப மெதுவாக நடைபோட்டு சக்தன் தம்பூரான் சிலையை வலம் வந்தன.
ராமச்சந்திரன் தலைமையில் யானைகள் அணிவகுப்பு
வடக்குநாதர் கோவிலுக்கு அருகில் எதிர் எதிரே 15 யானைகள் என மொத்தம் 30 யானைகள் அணிவகுத்து நின்றன. யானைகள் அணிவகுப்புக்கு தலைமை தாங்கும் மிகப்பெரிய யானையான தெச்சிக்கொட்டுக்காவு ராமச்சந்திரன் என்ற யானைக்கு கடந்த ஆண்டு பூரம் திருவிழாவின் போது மதம் பிடித்தது. இதனையடுத்து இந்த ஆண்டு ராமச்சந்திரன் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்னர் இந்த ஆண்டு ராமச்சந்திரன் யானை பங்கேற்றது.
குடைமாற்றம்
மாலையில் தெற்குகோபுர மைதானத்தில் திரண்டு நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் 30 யானைகள் மீது வண்ணமுத்து மணி குடைமாற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. ஒவ்வொரு யானையின் மீதும் அமர்ந்திருந்தவர் வண்ண குடைகளை மாற்றி, மாற்றி எடுத்துக் காட்டினார். இதையடுத்து ஒவ்வொரு யானைகள் மீதும் நின்ற 2 பேர் வெஞ்சாமரம் மற்றும் ஆலவட்டம் வீசினர். இதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். பஞ்ச வாத்தியங்கள், இளஞ்சித்திர மேளம் முழங்க இரண்டரை மணி நேரம் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இவற்றை மக்கள் ஆரவாரங்களுடன் கண்டு ரசித்தனர்.
கண்ணைக்கவரும் வான வேடிக்கைகள்
தீபாவளி பண்டிகையை மிஞ்சும் வகையில் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றன. பரமேக்காவு மற்றும் திருவெம்பாடி கோயில் நிர்வாகங்கள் ஆண்டுதோறும் போட்டி போட்டுக்கொண்டு வாணவேடிக்கைகளை பிரமாண்ட அளவில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வாணவேடிக்கைகளால், அதிகளவு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதாக சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் போதிலும், ஆண்டிற்கு ஆண்டு வாணவேடிக்கைகளின் அளவு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.