திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் கோலாகலம் : வைரம், முத்துக்கவசத்தில் மலையப்ப சுவாமி
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு குளிர குளிர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு குளிர குளிர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் சதுர்த்தசி, பௌர்ணமி, பிரதமை ஆகிய மூன்று நாட்கள் ஜேஸ்டாபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகம் முடிந்த ஒவ்வொரு நாளும் மலையப்பசுவாமி தனது தேவியருடன் வைரம், முத்துக்கவசம் அணிந்து அருள்பாலித்தார். 11ஆம் தேதி முதன் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்யவும் உற்சவர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமியின் தரிசனம் காணவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். உற்சவ மூர்த்திகள் விஷேச காலங்களில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார்.
ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அபிஷேகங்களால் உற்சவர்கள் சிலை சேதமடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிலைக்கு அணிவிக்கும் தங்ககவசம் அகற்றி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆனி திருமஞ்சனம் - நடராஜர் அபிஷேகத்தை தரிசித்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்
மலையப்பசுவாமிக்கு அபிஷேகம்
இந்த சிறப்பு பூஜை ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாத பவுர்ணமியையொட்டி நடப்பதால் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது.
சிறப்பு யாகங்கள்
திருமலையில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தங்க கவசங்கள் அகற்றி பால், தயிர், தேன், இளநீர் மற்றும் மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்களுடன் சிறப்பு யாகம் நடந்தது.
வைர கவசத்தில் மலையப்பசுவாமி
மாலையில் வைர கவசம் அணிவிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி கோயிலுக்குள் வலம் வந்தார். ஜேஷ்டாபிஷேகத்தின் 2வது நாளான நேற்று முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி கோயிலுக்குள் வலம் வந்தார். 3வது நாளான இன்று மாலை உற்சவர்களுக்கு மீண்டும் தங்கக்கவசம் அணிவிக்கப்படும். இந்த நிகழ்வினை பக்தர்கள் தொலைக்காட்சியில் நேரலையாக கண்டு தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானை தரிசிக்க அனுமதி
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 70 நாட்களுக்கு பிறகு வரும் 8, 9ம் தேதிகளில் முதற்கட்டமாக சோதனை முறையில் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 10ம் தேதி திருமலையை சேர்ந்த உள்ளூர் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் 11ம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆன்லைன் முன்பதிவு
ஆன்லைனில் 11ம் தேதி முதல் ஜூன் மாதம் முழுவதுக்கும் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசன டிக்கெட், அறைகளை பக்தர்கள் https:/tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் 8ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 6.30 முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
500 பக்தர்கள் மட்டுமே அனுமதி
ஆன்லைனில் தரிசன டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்காக திருப்பதி அலிபிரியில் 3000 இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். தரிசனத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதி இல்லை. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயிலிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இலவச டிக்கெட்டுகள்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். வெளி மாநில பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு கட்டாயம் http://spandana1.ap.gov.in/Registration/onlineRegistration.aspx இணையதளம் மூலம் இ பாஸ் பெற வேண்டும். இ பாஸ் பெறாமல் தரிசன டிக்கெட் மட்டும் பக்தர்கள் பெற்று வந்தால் மாநில எல்லையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீர்த்தம், சடாரி வழங்குவது நிறுத்தப்படும். மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். வைகுண்டம் காத்திருப்பு அறையில் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.